விஜயகாந்த்தின் கட்டப்பஞ்சாயத்து: வழக்கு தொடரப் போவதாக திருமாவளவன் அறிவிப்பு!
சென்னை:
கட்டப்பஞ்சாயத்து நடத்தி இயக்குநர் தங்கர்பச்சானை மிரட்டி, மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பாக நடிகர் விஜயகாந்த்,நடிகைகள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் மீது வழக்குத் தொடரப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இயக்குநர் தங்கர்பச்சான் நடிகைகள் குறித்துக் கூறிய கருத்துக்களுக்காக, வேலைநிறுத்தம் செய்யப் போவதாக நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இதையடுத்து தங்கர்பச்சான், மிகவும் வெளிப்படையாக நடிகர் சங்கத்திற்கே சென்றுபகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.ஆனால் மன்னிப்பு கேட்க வந்த தங்கர்பச்சானை சூழந்து கொண்டு, நடிகைகள் குஷ்பு, விந்தியா, ஸ்ரீபிரியா ஆகியோர்கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சித்தனர். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழைத் தாய் மொழியாக கொள்ளாத குஷ்பு, விந்தியா போன்ற நடிகைகள் தங்கர்பச்சானை தரக்குறைவாக விமர்சிப்பதா என்றுதமிழ் அமைப்புகளும், தமிழர்களும் கொந்தளித்துப் போயுள்ளனர். மேலும், தங்கர்பச்சானின் சொந்த ஊரான கடலூர்மாவட்டத்தில் விஜயகாந்த், குஷ்புவுக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே தங்கர்பச்சானுக்காக குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் தற்போது விஜயகாந்த், குஷ்பு மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் சங்கம் வரம்பு மீறி செயல்பட்டுள்ளது.கட்டப்பஞ்சாயத்து செய்து தங்கர்பச்சானை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதற்கு விஜயகாந்த், குஷ்பு,மனோரமா, ஸ்ரீபிரியா ஆகியோர்தான் பொறுப்பு.
தங்கர்பச்சான் தவறு செய்திருந்தால் அவர் மீது போலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக இவர்களேசட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து அடாவடியாக செயல்பட்டிருக்கிறார்கள்.
கட்டப்பஞ்சாயத்து செய்த நடிகர், நடிகைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விஜயகாந்த், குஷ்பு,ஸ்ரீபிரியா மீது நாங்கள் பொது நல வழக்கு தொடருவோம்.
மலேசியாவில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 100 தமிழர்கள் அங்கு கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர். எங்களதுமுயற்சியால் அவர்களில் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் மட்டும் தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர். மற்றவர்கள்என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற 21ம் தேதி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்கள், தாலுகா அலுவலகங்கள்முன்பு சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் நான், டாக்டர் ராமதாஸ், பழ. நெடுமாறன், டாக்டர் சேதுராமன்உள்ளிட்ட தலைவர்கள் கலந்து காள்கின்றனர் என்றார் திருமாவளவன்.