சென்னை பல்கலை. பெயர் மாற்றம்: அரசு திடீர் பல்டி!
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் பெயர் தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்று இருப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
சட்டசபையில் வியாழக்கிழமை கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார்.அதில், சென்னைப்பல்கலைக்கழகத்தின் பெயரை, பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்றே தொடர்ந்து நீடிக்கச்செய்ய மசோதா தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை பல்கலைக்கழகம் என்றேஅது அழைக்கப்பட வேண்டும் என்று அவை வாதிட்டன. இதுதொடர்பாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக விவாதம்நடந்தது. பின்னர் அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில், மதராஸ் பல்கலைக்கழகச்சட்டம் 1923ல் உள்ள மதராஸ் என்ற பெயரை தொடர்ந்து வைத்துக் கொள்ள வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டசபையில்22.9.2005 அன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரின் உணர்வுகளை அரசு மீண்டும் தீவிரமாக ஆய்வு செய்தது. பல்கலைக்கழக ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் மெட்ராஸ் என்ற பெயரே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை நாம்கருத்தில் கொள்ள வேண்டும்.
உலக அளவிலும் மதராஸ் என்ற பெயரே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் வெளிநாட்டுபல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்என்றுதான் இடம் பெற்றுள்ளது.
எனவே ஆங்கிலத்தில் யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் என்றும் தமிழில் சென்னை பல்கலைக்கழகம் என்றும் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தைஅரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சரின் அறிவிப்பை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கை தட்டி வரவேற்றனர். பின்னர் திமுக துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, விவாதிக்க அனுமதி இல்லை என்றார். அதற்குதுரைமுருகன், விவாதிக்க எழவில்லை, பாராட்டத்தான் எழுந்தேன் என்றார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா எழுந்து, கொல்கத்தா நகரின் பெயரை மாற்றியபோது, அங்குள்ள யுனிவர்சிட்டி ஆப் கல்கத்தாஎன்ற பெயர் மாற்றப்படவில்லை. ஆனால் பம்பாய் என்ற பெயர் மும்பை என்று மாறியபோது, யுனிவர்சிட்டி ஆப் மும்பை என்றுமாற்றப்பட்டது. எனவே இரண்டுக்குமே ஆதாரம் உள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் தமிழில் இருக்கும் பெயரை ஆங்கிலத்தில் மாற்றினார்கள். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச்இன்ஸ்டிடியூட் என்ற பெயரை முதலில் தமிழில் மாற்றினார்கள், பின்னர் ஆங்கிலத்தில் மாற்றி விட்டார்கள்.
சென்னை பல்கலைக்கழக பெயரை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றக் கூடாது என்று கோரி வெளிநடப்புச் செய்த திமுகவினர்,மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என்ற ஆங்கிலப் பெயரை சென்னை என மாற்றி மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற்றினார்கள்.
இதைப் பார்க்கும்போது மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற பழமொழிதான் நினைவுக்குவருகிறது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications