தேனி மருத்துவக் கல்லூரி: மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
தேனியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்த முடிவை விரைவில் அறிவிக்கவேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனியில் ரூ. 85 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. 300 படுக்கை வசதி கொண்டமருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக இந்தியமருத்துவக் கவுன்சில் இதுவரை முடிவு எதையும் தெரிவிக்காமல் உள்ளது.இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், அனைத்து வசதிகளுடன் தேனி மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கீகாரம் வழங்குவதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளது. எனவே அங்கீகாரம் வழங்குமாறுமருத்துவக் கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன், நடப்பு ஆண்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. இருப்பினும் அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு வசதியாக, அங்கீகாரம் கொடுப்பது குறித்தமுடிவை விரைவில் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.