பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடினார் கராத்தேவின் மனைவி
சென்னை:
தனது குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கராத்தேதியாகராஜனின் மனைவி ஜோதி மனு தாக்கல் செய்துள்ளாார்.
அவர் தனது மனுவில், எனது கணவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு போலீசார் என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டிவருகிறார்கள். அடிக்கடி தொல்லை தருகிறார்கள். எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது.தொலைபேசியிலும் மிரட்டுகிறார்கள். ஆபாசமாக பேசுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார் ஜோதி.
தனது மனுவில் உள்துறைச் செயலாளர், டிஜிபி, அடையாறு இன்ஸ்பெக்டர் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார் ஜோதி.
இந்த மனு நீதிபதி முருகேசன் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே துணை மேயர் என்ற வகையில் கராத்தேவுக்குத் தரப்பட்ட வந்த பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்றுள்ளனர். அவரதுவீட்டின் முன் பாதுகாப்பு இருந்த போலீசாரும் திரும்பப் பெறப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் தலைமறைவாக இருந்து கொண்டே மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மூலமாக மீண்டும் காங்கிரசில் சேர காய் நகர்த்திவரும் கராத்தே, விரைவில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து தனக்கு மத்திய அரசின் பாதுகாப்பைக் கோருவார் என்றும்தகவல்கள் வருகின்றன.
மத்திய பாதுகாப்பு கிடைத்த பின்னரே அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறுகின்றனர்.
இதற்கிடையே கராத்தே தியாகராஜன் வசிக்கும் சென்னை அடையாறு வீடு தன்னுடையது என்றும், அதை மீட்டுத் தரக் கோரியும்கராத்தேவின் பெரியப்பா மகன் கங்காதரன் மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
பராமரிப்பதற்காக தியாகராஜனிடம் அந்த வீடு தரப்பட்டதாகவும் ஆனால், அவர் அவர் அபகரித்துவிட்டதாகவும் தனது மனுவில்கங்காதரன் கூறியுள்ளார்.
ஆனால், இந்த வீட்டில் 30 ஆண்டுகளாக தாங்கள் குடியிருந்து வருவதாகவும், வீட்டைக் கைப்பற்ற போலீசாரும் கங்காதரனும் சேர்ந்துகொண்டு முயற்சி செய்வதாகவும் கராத்தேவின் மனைவி ஜோதி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தியாகராஜனுக்கு பல பக்கங்களில் இருந்தும் நெருக்கடி கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கங்காதரனை போயஸ் தோட்டம் தான்தூண்டிவிட்டுள்ளதாக கராத்தேவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.