ஊழல் அறுவடை செய்யும் ஜெ. விவசாயி தான்: வைகோ
திண்டுக்கல்:
ஊழலை விதைத்து, ஊழலை வளர்த்து, ஊழலை அறுவடையும் செய்யும் ஜெயலலிதா நிச்சயம் விவசாயி தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்டத்தின் சார்பில் வைகோவிடம் ரூ. 25 லட்சம் தேர்தல் நிதிஅளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு அவர் பேசியதாவது:முதலில் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ரூ. 10 லட்சம் தான் திரட்ட முடியும் என்று திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் செல்வராகவன்கூறினார். ஆனால், இன்றோ ரூ. 25 லட்சத்தை வழங்கியிருக்கிறார்.
இதே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் நாம் விவசாயிகள் மாநாட்டை நடத்தினோம். கட்சி வித்தியாசம் இல்லாமல், ஏழை, பணக்காரர்பேதமில்லாமல் தமிழகம் முழுவதும் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றார்கள்.
முல்லைப் பெரியாது அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது, நதி நீர் இணைப்பு ஆகியவை குறித்து பல்துறை நிபுணர்களை அழைத்துவந்து பேச வைத்தோம். விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விடை தர வைத்தோம்.
இன்று ஜெயலலிதா அம்மையாரும் சென்னையில் ஒரு விவசாயிகள் மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஊர்வாரியாக ஆட்களைத் திரட்டிஅழைத்துச் சென்று மாநாடு போட்டிருக்கிறார். அதில் எந்த உண்மையான விவசாயியும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. கூட்டிச்செல்லப்பட்ட கூட்டம் அது.
அந்த மாநாட்டில் தன்னை மிகப் பெரிய விவசாயி என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார் ஜெயலலிதா. ஆம்.. ஊழலை விதைத்து,ஊழலை வளர்த்து, ஊழலை அறுவடையும் செய்யும் ஜெயலலிதா நிச்சயம் விவசாயி தான், ஊழல் விவசாயி தான்.
6 மாதத்தில் தேர்தல் வரப் போகிறது என்பதால் நாளொரு கவர்ச்சித் திட்டத்தை அறிவிக்கிறார் ஜெயலலிதா. இதெல்லாம் வெறும்பேச்சளவில் தான் இருக்கும். ஒரு திட்டமும் நிறைவேறப் போவதில்லை என்றார்.