கண்ணி வெடிக்கு 12 இலங்கை கடற்படையினர் பலி
கொழும்பு:
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் கடற்படை வீரர்கள் சென்ற பஸ் கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 12 வீரர்கள்பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வட-மேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மாகாணத்தில் பேசலை என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.மன்னார் பகுதியில் தான் நேற்று விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் 7புலிகளை கடற்படையினர் சிறைபிடித்தனர். 3 கடற்படையினரை புலிகள் சிறைப் பிடித்தனர்.
அந்த மூவரையும் புலிகள் கொன்றுவிட்டதாக கடற்படை கூறுகிறது. ஆனால், இதை புலிகள் ஊர்ஜிதப்படுத்தவில்லை.
இந் நிலையில் இன்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் கடற்படை வீரர்கள் சென்ற பஸ் சுக்குநூறாக நொறுங்கியது. பஸ்சில் 30பேர் இருந்தனர். அங்கிருந்து 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 18 காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கண்ணி வெடித் தாக்குதலை புலிகள் தான் நடத்தியதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், புலிகள் அதைஉறுதிப்படுத்தவில்லை.