பாஜக: தலைவர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை
டெல்லி:
பாஜகவில் தலைவர் பதவிக்கு பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இன்று மும்பையில் அக் கட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் தலைவர் பதவிக்கு கடும்போட்டியும் கோஷ்டிப் பூசலும் உருவாகியுள்ளது.இன்று மும்பையில் தொடங்கும் மாநாட்டில் அக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம், தேசிய கவுன்சில் கூட்டங்கள்நடக்கின்றன. இந்த மாநாட்டில் தலைவர் பதவியில் இருந்து அத்வானி விலகவுள்ளார்.
இதையடுத்து தனக்கு வேண்டிய வெங்கையா நாயுடுவை தலைவர் பதவியில் அமர்த்த அத்வானி விரும்பினார். ஆனால், அதைஆர்எஸ்எஸ் ஏற்கவில்லை.
வட மாநிலத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரைத் தான் தலைவராக்க வேண்டும் என பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் தலைமைஉத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் ராஜ்நாத் சிங்கை தலைவராக்க திட்டமிடப்பட்டது.
அதை அத்வானி விரும்பவில்லை. இருந்தாலும் ஆர்எஸ்எஸ் நெருக்கடிக்கு அவர் பணிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ராஜ்நாத் சிங் தலைவராகலாம் என்ற செய்தி பரவியதும் அவரது ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில் கட்சியின் தலைவர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என வெங்கையா நாயுடு கூறினார்.
அதே போல ராஜ்நாத்தை விரும்பாத சில மூத்த தலைவர்களும் கட்சித் தலைவர் குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்று கூறிவருகின்றனர்.
ஆனால், அத்வானியின் தீவிர எதிர்ப்பாளரான மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி பெங்களூரில் நிருபர்களிடம்பேசுகையில், ராஜ்நாத் சிங்கை தலைவராக்க முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.
அத்வானியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் தான் தலைவர். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன் என்றார்ஜோஷி.
ஆனால், ராஜ்நாத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை என வெங்கையா நாயுடு கூறியிருக்கிறாரே என நிருபர்கள் கேட்டபோது,அப்படியிருந்தால் ராஜ்நாத்தை நான் வாழ்த்தி இருப்பேனா என்று திருப்பிக் கேட்ட ஜோஷி, இதில் மறைப்பதற்கு என்னஇருக்கிறது என்றார்.
தலைவர் பதவியைப் பிடிக்க ஜோஷியும் முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசி ரூம் அரசியல்வாதிகள் என்று உமா பாரதி உள்ளிட்டவர்களால் குற்றம் சாட்டப்படும் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லிஆகியோரும் ராஜ்நாத் சிங் தலைவராவதை விரும்பவில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்சின் முழு ஆதரவு இருப்பதால் ராஜ்நாத் சிங்தலைவராவதை இவர்களால் தடுக்க முடியாது என்றே தெரிகிறது.
இவர்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்கும் வெங்கையா நாயுடுவைத் தலைவராக்க விரும்பினர். ஆனால், தென் இந்தியாவைச்சேர்ந்த நாயுடுவால் கட்சி தென்னகத்திலும் வளரவில்லை, வடக்கிலும் வளரவில்லை என ஆர்எஸ்எஸ் கருதுகிறது.
இதனால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்நாத் சிங்கை ஆர்எஸ்எஸ் தலைவராக்கச் சொல்லியுள்ளது.
பாஜகவின் விஷயங்களில் ஆர்எஸ்எஸ் தலையிடுவதில்லை என்று வெளியில் அக் கட்சி சொன்னாலும், புதிய தலைவர்விஷயத்தில் ஆர்எஸ்எஸ்சின் தலையீடு கண்கூடாகவே தெரிகிறது.