மத்திய அமைச்சர்களின் வாய் சவடால்: ஜெ
பெரியகுளம்:
மாநிலத்தின் திட்டங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று ஆண்டிப்பட்டியில்நடந்த விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் குற்றம் சாட்டினார்.
தேனி மாவட்டத்தில் ரூ. 159 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று நடந்த விழாவில் தொடங்கிவைத்தார்.இதற்காக இன்று காலை ஜெயலலிதா சிறப்பு விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெரியகுளம்அருகே உள்ள ஆண்டிப்பட்டியை அடுத்த ஜெயமங்கலத்திற்கு சென்றார். இதற்காக விழா மேடைக்கு அருகில் ஹெலிகாப்டர்இறங்குதளம் அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு நடந்த அரசு விழாவில் தேனி மாவட்ட காவல்துறை தலைமை அலுவலக கட்டடம், தேனி ஆயுதப்படை வளாகக் கட்டடம்உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் பெரியார் வைகை சிறுபுனல் மின் திட்டங்கள்உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
ரூ. 56.45 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தும், ரூ. 105.83 கோடியில்மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 6.61 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளைவழங்கியும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசினார்.
மொத்தம் ரூ. 159 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜெயலலிதா பேசியதாவது,
போலீசுக்கு பாராட்டு:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடக்கும் 6வது அரசு விழா இது. 6வது முறை உங்களை பார்க்கவும் பல்வேறு நலத் திட்டங்களைதொடங்கி வைக்கவும் வந்துள்ளேன். உங்கள் அன்பையும் பாசத்தையும் பார்க்கும் போது 1 கோடி தடைகள் வந்தாலும் அதனைதகர்த்து எறியும் வல்லமை எனக்கு வருகிறது.
மாநிலத்தில் அமைதியும்-பாதுகாப்பான சூழ்நிலை நிலவினால் தான் வளர்ச்சி பணிகள் நடைபெறும். அமைதியும் பாதுகாப்பும்இந்திய நாட்டில் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மை பெற்றுவிளங்குகிறது.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதிகளை தேனி மாவட்ட மக்களுக்கு நிறைவேற்றி உள்ளேன். ஒரே ஒருவாக்குறுதி மட்டும் பாதியில் நிற்கிறது. அது தான் தேனி மருத்துவக் கல்லூரி. உபகரணங்கள் வாங்கப்பட்டு தேவையானமருத்துவர்களும், செவிலியர்களும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தங்கும் விடுதி இல்லை என்ற குறைபாட்டைக் காட்டி இந்திய மருத்துவ குழுமம் அனுமதி தர மறுத்துவிட்டது. அனுமதிபெற்றுத் தர மத்திய அரசில் இடம் பெற்று உள்ளவர்களும் தவறிவிட்டார்கள்.
கவுண்டமணி-ஓமகுச்சி நரசிம்மன் கதை:
இதை பார்க்கும் போது எனக்கு ஒரு குட்டிக் கதை தான் நினைவுக்கு வருகிறது. எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவர் மிகப் பெரியஅதிகாரியாக பதவிக்கு வந்து விட்டார். அவர் தன் திறமைகளை வெளிக் காட்டுவதற்காக தனது அலுவலகத்தில் டெலிபோனில்பேசிக் கொண்டு இருந்தார்.
அந்த நேரத்தில் அங்கு ஒருவர் வந்தார். அவரை பார்த்ததும் ஏதோ ஒரு பெரிய தலைவரிடம் பேசுவது போல நீண்ட நேரம்பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் தன் எதிரே நிற்பவரை பார்த்து நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அந்த நபர் நீங்கள் பேசிக் கொண்டிருந்த டெலிபோனுக்கு இணைப்பு கொடுக்க நான் வந்துள்ளேன் என்றார். இதனைகேட்ட அதிகாரி அசடு வழிந்தார். (கவுண்டமணியும் ஓமகுச்சி நரசிம்மனும் ஒரு படத்தில் இதே ஜோக்கில் நடித்ததை நினைவுகூர்க)
தகுதியில்லாத இந்த அதிகாரி போல சில பேர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்கள் டெல்லியில்இருந்து வரும் போதெல்லாம் தமிழகத்துக்கு பல கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக வாய் சவடால் பேசி விட்டுஒன்றும் செய்யாமல் இருப்பதோடு தமிழக திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுகிறவர்களாக உள்ளார்கள்.
தேர்ந்தெடுத்த மக்களுக்கு தினை அளவு நலம் வழங்க முடியாத இவர்களை தமிழக மக்கள் நன்றாக புரிந்திருக்கிறார்கள்.தமிழகம் முழுவதும் 12,618 கிராம ஊராட்சிகள் உள்ளன. இது வரை 4300 கிராம ஊராட்சிகளுக்கு கனிணி வழங்கப்பட்டுள்ளது.விரையில் மற்ற கிராமங்களும் கனிணிமயமாக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாவட்ட அதிமுக சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி பெரியகுளம் பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டிநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜெயமங்கலத்தில் பிரம்மாண்ட மேடையும் பெரும் கூட்டமும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
தென் மண்டல ஐஜி திரிபாதி ஆண்டிப்பட்டியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தார்.
கருணாநிதிக்கு கண்டனம்:
முன்னதாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமைஉள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான மானியத்தை ரத்து செய்துள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிபிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது எப்படி இருக்கிறது என்றால் பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல உள்ளது. டெல்லியில்பிள்ளையைக் கிள்ளி விட்டு விட்டு சென்னையில் தொட்டிலை ஆட்டி வருகிறார் கருணாநிதி.
மானிய ரத்து தொடர்பாக,பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடி முடிவெடுத்தபோது,தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும் எங்கே போய் விட்டார்கள்? அவர்களுக்குத் தெரியாமல்தான் இந்த அநியாயம்நடந்து விட்டதா? அல்லது மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்பதைகருணாநிதி விளக்க வேண்டும்.
அடுக்கடுக்கான பொய்களைக் கூறி, ஜால அறிக்கைகளால் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. அவரது இந்த கபடநாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். தக்க சமயத்தில் அவருக்குப் பாடம் கற்பிப்பார்கள்.
குதிரை வெளியேறிய பின்னர் லாயத்தைப் பூட்டிய கதையாக கருணாநதியின் நாடகம் உள்ளது. அதிலும் குதிரையை வெளியேதள்ளிய கருணாநிதியே, லாயத்தையும் பூட்டியதாக மார்தட்டிக் கொள்கிறார்.
இவர்கள் என்னதான் நாடகம் ஆடினாலும், தமிழகத்தில் ரேஷன் அரிசியின் விலை தொடர்ந்து ரூ. 3.50க்கே விற்பனைசெய்யப்படும் என நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
முதலமைச்சர் வருகையையொட்டி ஜெயமங்கலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஓ.பன்னீர் செல்வம்மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். ஜெயலலிதாவின் வருகையையொட்டி ஆண்டிப்பட்டி நகரமே விழாக்கோலம்பூண்டுள்ளது.