கஞ்சா போதை? தெலுங்கு நடிகை தற்கொலையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. போலீஸ் சொல்வது என்ன
போபால்: திருமணமான சில மாதங்களிலேயே ட்விஷா சர்மா என்ற பெண் தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகியுள்ளது. ட்விஷா சர்மா கஞ்சா பயன்படுத்தியதாக அவரது மாமியார் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், போலீசார் இதை மறுத்துள்ளனர். இந்த வழக்கில் சினிமாவை மிஞ்சும் வகையில் ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான சில மாதங்களிலேயே ட்விஷா சர்மா மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. "என் மகள் வரதட்சணைக் கொடுமையால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்" எனப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வரும் வேளையில், போலீசார் சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளனர்.

தெலுங்கு நடிகை
நோய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா.. மிஸ் புனே அழகி பட்டம் பெற்றுள்ள இவர், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். போபாலைச் சேர்ந்த சமர்த் சிங்கிற்கும் டிசம்பர் மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்தச் சூழலில், கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ட்விஷா தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் மாமியார் தான் காரணம் எனப் பெண்ணின் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். வரதட்சணை கேட்டு கணவர் வீட்டாரால் ட்விஷா மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கஞ்சா
இதற்கிடையே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான ட்விஷாவின் மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபாலா சிங், ட்விஷாவுக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகச் சாடியிருந்தார். கர்ப்பமாக இருந்தபோது கூட கஞ்சா பயன்படுத்தியதாகவும் அவரது குடும்பத்தினரே அவரை கிளாமர் துறைக்குத் தள்ளிவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மறுப்பு
இந்தச் சூழலில் தான் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இப்போது வந்துள்ளது. அதில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை என போபால் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "பிரேதப் பரிசோதனை அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்தவொரு அடையாளமும் கண்டறியப்படவில்லை. போலீஸ் விசாரணையிலும் அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, இது தற்கொலை போல தான் தெரிகிறது.. இது கொலை அல்ல" என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இரண்டாவது முறையாகப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். போபால் போலீசார் முதலில் 2-வது பிரேதப் பரிசோதனைக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு, பிறகு திடீரென முடியாது எனச் சொல்வதாகப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் எஃப்ஐஆர் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.
போலீஸ் விளக்கம்
இருப்பினும், இதை மறுத்துள்ள கமிஷனர், "எஃப்ஐஆர் பதிவில் தாமதம் இல்லை. மேலும், இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் போலீசுக்கு கிடையாது. அதற்கு அவர்கள் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். குடும்பத்தினர் மனு அளித்ததால் அதை கேஸ் டைரியில் சேர்த்துள்ளோம்" என்றார். 2-வது பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கும் குடும்பத்தினர், இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
பாதிப்பு ஏற்படாது
ட்விஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்யப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பெல்ட், பிரேதப் பரிசோதனை டாக்டரிடம் சரியான நேரத்தில் சென்றடையவில்லை என்ற தவறை கமிஷனர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மேலும், "இது தொடர்பாகத் தனியாக ஒரு விசாரணை நடத்தப்படும். இருப்பினும், பின்னர் அந்தப் பெல்ட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கை பெறப்பட்டுவிட்டதால், இது விசாரணையைப் பாதிக்காது" என்று கமிஷனர் உறுதி அளித்துள்ளார்.
தற்போது ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ட்விஷா இறந்ததில் இருந்தே அவரது கணவர் சமர்த் சிங் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது..
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications