குட்கா பஞ்சாயத்து.. தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்படும் விஜயபாஸ்கர்! அறப்போர் அட்டாக்!
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தவெகவில் சேரும் தேதி உறுதியாகி உள்ளது. ஆதரவாளர்களுடன் ஜூலை 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படும் நிலையில், அதனை அறப்போர் இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி. விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை தொகுதியில் 2021 மற்றும் 2026ல் மீண்டும் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரும் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இருவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, ஜூலை 2-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜயபாஸ்கர் தவெகவில் இணைவதை அறப்போர் இயக்கம் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் குட்கா விற்க அனுமதி கொடுத்தாக புகாருக்கு உள்ளான அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன். இவர்கள் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்பொழுது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல்." என விமர்சித்துள்ளது.














Click it and Unblock the Notifications