அறநிலையத்துறை அமைச்சரானார் ‘பிராமண’ சமூகத்து ரமேஷ்.. சர்ச்சைக்குள்ளான விஜய்யின் முடிவு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கம் ஆளுநர் மாளிகையில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய ஒட்டுமொத்த அரசியல் விவாதங்களும் ஒரே ஒரு துறையை நோக்கியே திரும்பியிருக்கிறது. அது, தமிழகத்தின் மிக முக்கியப் பாரம்பரியப் பின்னணி கொண்ட 'இந்து சமய அறநிலையத்துறை' (HR&CE).
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 23 அமைச்சர்களில், ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ரமேஷுக்கு இந்தத் துறை ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற விவரம் தான், இப்போது கோட்டை வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

'கோவில்களை அரசிடமிருந்து விடுவி!' - நீண்ட நாள் கோரிக்கையும் தற்போதைய சூழலும்:
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில், குறிப்பாகப் பிராமண அமைப்புகள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புகள் தரப்பில், "கோவில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும்; அறநிலையத்துறையின் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் பக்தர்களிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்ற முழக்கம் மிகத் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல சட்டப் போராட்டங்களும், சமூக ஊடகப் பிரச்சாரங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட ஒரு தார்மீக மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு 'பிராமண' அமைச்சரிடம் அறநிலையத்துறை... விஜய்யின் அரசியல் கணக்கு என்ன?
பிராமண சமூகத்தைச் சேர்ந்த, அதுவும் ஆன்மீக பூமியான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரமேஷிடம் இந்தத் துறையை ஒப்படைத்ததன் மூலம் விஜய் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயன்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம் விஜய் முடிவு தவறு என்றும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: அதே சமயம் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் விஜய் மீது வலதுசாரி அமைப்புகள் வைக்கக்கூடிய இந்து மத எதிர்ப்பு என்ற முத்திரையை உடைக்க இந்த நியமனம் ஒரு வலுவான கேடயமாகப் பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் நம்பிக்கையைப் பெறுதல்: ஆன்மீக ரீதியாகவும், கோயில் நிர்வாக முறைகளிலும் பாரம்பரியப் புரிதல் கொண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரையே அந்தத் துறையின் தலைவராக்குவதன் மூலம், ஆன்மீகவாதிகள் மற்றும் பக்தர்களின் நன்மதிப்பைப் பெற முடியும் என டிவி கே தலைமை கணக்குப்போட்டுள்ளது.
எழும் கேள்விகளும் முரண்பாடுகளும்:
இருப்பினும், இந்த நியமனம் மற்றொரு புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. கோவில்களை அறநிலையத்துறையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே, இப்போது அதே அறநிலையத்துறையின் அமைச்சராக அமர்ந்து அரசு கட்டுப்பாட்டைத் தொடரப் போகிறார் என்பதுதான் அந்த முரண்பாடு.
"அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு ரமேஷ், கோவில்களைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போகிறாரா அல்லது கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் நிர்வாகச் சீர்திருத்தங்களிலும் தங்களுக்குச் சாதகமான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பாரா?" என்ற எதிர்பார்ப்பு அந்த அமைப்புகளிடையே எழுந்துள்ளது.
திராவிட அமைப்புகளின் ரியாக்ஷன் என்ன?
தமிழகத்தில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் சமூக நீதி மற்றும் அறநிலையத்துறை கோட்பாடுகளுக்கு மத்தியில், இந்த நியமனத்தை திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் எப்படிப் பார்க்கப் போகிறார்கள் என்பதும் முக்கியமானது. அறநிலையத்துறை என்பது அனைத்து சாதியினருக்குமான சமத்துவத்தை நோக்கிய பயணமாகப் பார்க்கப்படும் நிலையில், இந்தத் தேர்வு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதா என்ற விமர்சனங்களும் மெல்ல முளைக்கத் தொடங்கியுள்ளன.
"ஸ்ரீரங்கநாதர் பாதம் பணிந்து ஜெயித்த ரமேஷுக்கு, இப்போது அதே ரங்கநாதர் கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத்துறை சாவியைக் கொடுத்திருக்கிறார் விஜய். 'கோவிலை விடுவி' என முழங்கியவர்கள் மத்தியில், 'கோவில் துறையை உங்களிடமே தருகிறேன், சிறப்பாக நடத்துங்கள்' என விஜய் ஆடியிருக்கும் இந்த ஆட்டம், தமிழக ஆன்மீக-அரசியல் களத்தில் ஒரு புது அத்தியாயம்!"












Click it and Unblock the Notifications