மதுரை ஜல்லிக்கட்டு: காளை முட்டி 2 பேர் பலி
மதுரை:
மதுரை அருகே நடந்த இரு வேறு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் 2 இளைஞர்கள் மாடு முட்டியதில் இறந்தனர். 200க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை அருகே உள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு களை கட்ட ஆரம்பித்துள்ளது. தை முதல் நாள்பொங்கல் தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் 60 பேர் காயமடைந்தனர்.ஞாயிற்றுக்கிழமை பாலமேடு மற்றும் ஆணையூரில் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாலமேடுஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டன.
துள்ளி வந்த காளைகளை அடக்கி அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள பரிசுகளை எடுப்பதற்காக முரட்டு இளைஞர்கள் காளைகள்மீது பாய்ந்து அமுக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர். இந்த முயற்சியில் பல இளைஞர்கள் காயமடைந்தனர்.
மாடுகளின் கொம்புகளின் தாக்குதலில் சிக்கி மூடுவார்பட்டியைச் சேர்ந்த கந்தன் என்ற 30 வயது வாலிபர் பரிதாபமாக இறந்தார்.மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதேபோல ஆணையூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.காளைகளை அடக்க முயற்சித்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மாடு முட்டித் தாக்கியதில் பெரி இலங்கன் என்ற 20வயது வாலிபர் இறந்தார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காயமடைந்த அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.