இறங்கத் தெரியாத ஜி.கே.மணி: சபாநாயகர் கிண்டல்
சென்னை:
சட்டசபையில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மணி அடித்த பிறகும் நிற்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் அவரைசபாநாயகர் காளிமுத்து கிண்டலடித்தார். இதனால் அவையே சிரிப்பலையில் மிதந்தது.இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஜி.கே.மணி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குஒதுக்கப்பட்ட கால அளவு முடிந்ததால், சபாநாயகர் காளிமுத்து மணியை ஒலித்தார். ஆனாலும் மணி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
இதைப் பார்த்த சபாநாயகர் காளிமுத்து சிரித்தபடியே, மணியிடம் இது தான் பிரச்சினை. பேச ஆரம்பித்து விடுவார், ஆனால்பேச்சை நிறுத்த முடியாமல் திணறுவார். என்றைக்காவது இத்துடன் முடித்துக் கொள்கிறேன், சபாநாயகருக்கு நன்றி என்று கூறிமுடித்துள்ளீர்களா? புதிதாக சைக்கிள் ஓட்டப் பழகியவன் ஏறி உட்கார்ந்து விட்டால் இறங்கத் தெரியாது, எங்காவது முட்டிமோதி தான் நிற்பான். அந்தக் கதை தான் மணியுடைய கதையும் என்றார்.
சபாநாயகரின் பேச்சைக் கேட்டதும் மணி உள்பட சபையில் இருந்த அத்தனை பேரும் சிரிப்பலையில் மூழ்கினர். சபாநாயகரைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, மணி எளிதில் டேக் ஆப் ஆகி விடுவார், ஆனால் லேண்டிங்கில் தான் பிரச்சினைஏற்படும் என்றார். மறுபடியும் அவை சிரிப்பில் மூழ்கியது.