சங்கரராமன் கொலை: ஜெயேந்திரர் மனு தள்ளுபடி
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கில் காவல்துறை சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து ஜெயேந்திரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை புதுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சங்கரராமன் கொலை வழக்கு தற்போது புதுவை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் காவல்துறை சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து ஜெயேந்திரர் சார்பிலும், புதுவை வழக்கறிஞர்கள் சார்பிலும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த இரு மனுக்கள் மீதான விசாரணையும் சமீபத்தில் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று நீதிபதி சின்னப்பாண்டி தீர்ப்பு வழங்கினார்.
அப்போது ஜெயேந்திரர் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவர் தள்ளுபடி செய்தார்.
தமிழக அரசு வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராவதை தடை செய்ய முடியாது என்று அவர் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 2ம் தேதிக்கு சங்கரராமன் கொலை வழக்கை ஒத்திவைத்த நீதிபதி அன்று விசாரணை தொடங்கும் எனவும் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின் மூலம், சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞரே ஆஜராகி வாதாடுவார். தமிழக
அரசின் சிறப்பு வழக்கறிஞர் பாலசுந்தரம், இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதாடுவார் என ஏற்கனவே தமிழக அரசுஅறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications