திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: வைகோ
மதுரை:
திமுக கூட்டணியில் தான் இந்த நிமிடம் வரை நீடிக்கிறோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன.குறிப்பாக பாமக மற்றும் மதிமுகவினால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மதிமுகவுக்கு 50 இடங்களுக்குக் குறையாமல் ஒதுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு அணிக்கு மாறத் தயங்கமாட்டோம் என்று அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பகிரங்கமாக பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் மதிமுக அணிமாறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், வைகோ கூட்டணியை விட்டுப் போக மாட்டார் என்றுநம்புகிறேன். இப்போது வரை திமுக கூட்டணியில் தான் மதிமுக நீடிக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட வைகோ,செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் தான் மதிமுக இந்த நிமிடம் வரை நீடிக்கிறது.
அணியிலிருந்து விலக மாட்டோம். கூட்டணி நீடிக்கும். திருமங்கலம் எனக்கு மறக்க முடியாத ஊர். பொடா சட்டத்தில் களம்காண காரணமாக அமைந்த பொதுக்கூட்ட மேடை இந்த ஊரில் தான் போடப்பட்டது. அதனால் திருமங்கலத்தை நான் மறக்கமாட்டேன்.
இந்த நிகழ்ச்சியில் பொடா சட்டத்தில் களம் கண்டவர்கள், வென்றவர்கள் வந்துள்ளனர், சந்தோஷமாக இருக்கிறது. இலங்கையில்,தமிழ்ப் பெண்களின் கற்பை சூறையாடி வருகிறது சிங்கள ராணுவம்.
அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முயலவேண்டும் என்றார் வைகோ.
இன்று மாலை சென்னையில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோவின் பேச்சு அதிக எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அவர் விலாவாரியாக பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் திருமங்கலத்தில்நடந்த நிகழ்ச்சியில், திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று வைகோ கூறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.