சயனைட் கொடுத்து வீரப்பன் கொலை?
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விஷம் கொடுத்த கிராமத்து மருத்துவர் உள்ளிட்டோரின் வாக்குமூலம் அவர்களுக்குத் தெரியாமலேயே வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே, தமிழக அதிரடிப்படை வீரர்களால் கொல்லப்பட்டான். வீரப்பன் எப்படிக் கொல்லப்பட்டான் என்பது குறித்து அப்போதே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.தனது கணவரை ஏமாற்றிப் பிடித்து, விஷம் வைத்துக் கொன்று விட்டு என்கவுண்டரில் கொன்றதாக அதிரடிப்படையினர் நாடகமாடுவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அந்த சமயத்தில் பரபரப்பு புகார் தெரிவித்தார். ஆனால் அவரது குற்றச்சாட்டை தமிழக அதிரடிப்படைத் தலைவரான விஜயக்குமார் மறுத்தார்.
வீரப்பன் என்கவுண்டரில் தான் கொல்லப்பட்டான். சரணடைய அவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் மறுத்து விட்டு எங்களை துப்பாக்கியால் சுட முயன்றபோது அவனைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். இருந்தாலும், வீரப்பனை ஏமாற்றி, அதிரடிப்படையினர் இருந்த பகுதிக்கு வர வைத்து சுட்டுக் கொன்றதாகவும் ஒரு தகவல் வெளியானது.
வீரப்பன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தர்மபுரி கோட்ட வருவாய் வட்டாட்சியர் விசாரணை நடந்தது. இந்த நிலையில் வீரப்பன் இறந்து ஒரு வருடத்தைத் தாண்டிய நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தகவல் இது தான். வீரப்பனுக்கு கிராமத்து மருத்துவர் ஒருவர் மூலம் சயனைட் விஷம் கொடுத்து கொன்று விட்டதாக இந்தப் புதிய தகவல் கூறுகிறது. வீரப்பன் சாவு குறித்த உண்மையை அறிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்திய உண்மை அறியும் குழுவுக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
அதை விட முக்கியமாக, சம்பந்தப்பட்ட கிராமத்து மருத்துவர் தனது வாயாலேயே வீரப்பனுக்கு விஷம் கொடுத்ததை ஒப்புக் கொண்டதை வீடியோவில் படம் பிடித்துள்ளார்களாம்.
கிராமத்து மருத்துவர் தவிர மேலும் 3 பேரும் இதுதொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இதையும் வீடியோவில் படமாக்கியுள்ளார்கள். வீடியோவில் படமாக்குவது தெரியாமலேயே கிராமத்து மருத்துவரும் மற்ற 3 பேரும் இந்த தகவலை விலாவாரியாக கூறியுள்ளார்களாம்.
இந்த வீடியோ ஆதாரம் தற்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வீரப்பனுக்கு கொடுக்கப்பட் சயனைட் இருந்த பாட்டிலும் முத்துலட்சுமியிடம் சிக்கியுள்ளதாம்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில்,சிபிஐ விசாரணை கோரி விரைவில் முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளாராம். வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதை முத்துலட்சுமியும் ஒப்புக் கொண்டுள்ளார்.
வீரப்பன் உயிரோடு இருந்தவரை ஆடியோ கேசட்டுகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இப்போது அவன் கதை முடிந்த பின்னர் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.