அணை வழக்கு: பிரேம்குமார் விசாரணை ஆரம்பம்
சென்னை:
கரூர் அமராவதி பாலம் தொடர்பான வழக்கில் நகராட்சி முன்னாள் ஆணையர்களிடம் எஸ்.பி.பிரேம்குமார் தலைமையிலானசிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் சமீபத்திய கன மழை மற்றும் பெரும் ஆற்றுவெள்ளத்தில் சேதமடைந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன்படி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாலம் கட்டும்பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், பாலம் கட்டுவதற்கான அனுமதியைக் கொடுத்த கரூர் நகராட்சியில் ஆணையர்களாகப் பணியாற்றிய 3 பேரிடம்தற்போது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்ட போது ஆணையர்களாக இருந்தவர்களில் ஜனகராஜ், சத்தியமூர்த்திஆகிய இருவரும் தற்போது ஓய்வு பெற்று விட்டனர்.
தினகரன் என்பவர் மதுரை மாநகராட்சி ஆணையராக தற்போது உள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவரானஜனகராஜும், சென்னையில் வசித்து வரும் சத்தியமூர்த்தியும், சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுவிசாரிக்கப்பட்டனர்.
அவர்களிடம் எஸ்.பி. பிரேம்குமார் விசாரணை நடத்தினார். தினகரனிடம் இதேபோன்ற விசாரணை நடத்தப்பட்டது.அமராவதி பால வழக்கு சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான விசாரணைப்படையால் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாலாறு: பாஜக நடைபயணம்
இதற்கிடையே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் இன்றுகாலை ஆந்திர எல்லையை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கினார்.
ஆந்திர மாநிலம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில்தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலஎல்லையில் உள்ள தமிழக ஊரான குல்லூர் வரை நடைபயணத்தைத் தொடங்கினார்.
வருகிற 29ம் தேதி அவர் குல்லூரை அடைகிறார். அவருடன் ஏராளமான பாஜகவினரும் நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஆந்திர மாநில அரசு அனுமதி கொடுத்தால், அணை கட்டப்படும் பகுதியான கணேசபுரம் சென்று முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.