தமிழக கோவில்களில் கெளடா, குமாரசாமி பூஜை
விழுப்புரம்:
தமிழகத்துடன் நல்லுறவை மேம்படுத்த எனது தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கர்நாடக மாநில முதல்வராகப் பதவியேற்கவுள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ள அருள்மிகு வக்கிரகாளியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இங்கு வந்து செல்வோர், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.இந்தக் கோவிலுக்கு குமாரசாமி நேற்று வருகை தந்தார். கோவிலில் உள்ள அம்மனையும் பிற தெய்வங்களையும் பயபக்தியுடன் வணங்கினார்.
வழிபட்ட பின்னர் வெளியே வந்த குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது தலைமையிலான கர்நாடக அரசு தமிழக அரசுடனும், தமிழகத்துடனும் நல்லுறவை பேணிப் பாதுகாக்கும். இதற்காக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகம் தவிர பிற அண்டை மாநிலங்களுடனும் நல்லுறவு பேணப்படும். கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே நிலவி வரும் காவிரிப் பிரச்சினையிலும் சுமூகத் தீர்வு காணப்படும். அதேபோல பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்தும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
பின்னர் அவர் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்துக்கும் சென்றதாகத் தெரிகிறது.
குமாரசாமி பிப்ரவரி 3ம் தேதி தல்வராகப் பதவியேற்கிறார். பின்னர் 8 நாட்களில் பெரும்பான்மை பலத்தை அவர் நரூபிக்க வேண்டும் என ஆளுனர் அவகாசம் கொடுத்துள்ளார்.
காஞ்சி கோவிலில் தேவே கெளடா:
மகனைப் போலவே அப்பா தேவே கெளடாவும் காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். 108 வைணவ திவ்ய தேவங்களில் ஒன்றான இக் கோவிலில், ராமாயணத்தில் வரும் ஜடாயு மோட்சம் பெற்றதாக ஐதீகம் உண்டு.
இந்தக் கோவிலுக்கு வந்த கெளடா பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்த பின்னர், இங்கு நடக்கும் தெப்போற்சவத் திருவிழாவிலும் கலந்து கொண்டு தெப்பத்தின் வடத்தை பிடித்து இழுத்தார்.
பரிகார பூஜைக்காக கெளடா இந்தக் கோவிலுக்கு வந்ததாகத் தெரிகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ல குமாரசாமிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நல்ல நெருக்கம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தரம்சிங் ஆட்சியை குமாரசாமி கவிழ்த்தபோது கூட முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் அவர் பேசி அரசியல் அட்வைஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.