பேச்சு: பாலசிங்கம் தலைமையில் புலிகள் குழு
கொழும்பு:
இலங்கை அரசுடன் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க 3 பேர் கொண்ட குழுவை விடுதலைப் புலிகள் இயக்கம் நியமித்துள்ளது.
இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெனீவாவில் இந்தப் பேச்சுவார்ததை நடைபெறவுள்ளது. எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் விடுதலைப் புலிகள் சார்பில் இரு தேதிகள் இலங்கை அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 14 மற்றும் 15 அல்லது 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என இலங்கை அரசுக்கு புலிகள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் எனவும் இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இலங்கை அரசுடன் நடக்கப் போகும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் புலிகள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தலைமையிலான இந்தக் குழுவில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன், கர்னல் ஜெயம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை அரசுத் தரப்பில் யார் பங்கற்ேபார் என்பது தெரியவில்லை. இருப்பினும் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பெரிஸ்சே மீண்டும் பங்கேற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
பெரீஸ், முந்தைய ரணில் விக்கிரமசிங்கே அரசில் அமைச்சராக இருந்தவர். இலங்கை அரசின் சார்பில் அவர்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். தற்போது இவர், ராஜபக்ஷேவின் கட்சிக்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போதைய பேச்சுவார்த்தையிலும் பெரீஸே பங்கேற்கலாம் எனத் தெரிகிறது.
இன்று 15 அகதிகள் வருகை:
இந் நிலையில் இலங்கையிலிருந்து இன்று 15 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
சமீபத்தில் தமிழகத்திற்கு வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியுள்ளது. இந் நிலையில் இன்று காலை ஒரு குழந்தை உள்பட 15 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசி வரும் இலங்கை அரசு இன்னொரு பக்கம் ராணுவம் மூலம் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை அரங்கேற்றி வருவதாக அகதிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
அங்கு பதட்டமான சூழ்நிலை தொடருவதால் தாங்கள் அங்கிருந்து வந்ததாகவும் அகதிகள் கூறினர்.