திருட்டு வீடியோ வழக்கில் அழகிரி விடுதலை
மதுரை:
அனுமதி இல்லாத வீடியோ கேசட்டுகளை விற்பனை செய்ததாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து மதுரை விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மதுரை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ராயல் வீடியோ கடையில் போலீஸார் சோதனை நடத்தினர்.இதில் அனுமதி பெறாமல் 4,000க்கும் மேற்பட்ட வீடியோ கேசட்டுக்கள் இருந்ததாக கூறி அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அழகிரி, கடையின் மேலாளர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காபிரைட் சட்டத்தின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை மதுரை ஐந்தாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அழகிரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 2வது விரைவு நீதிமன்றத்தில் அழகிரி மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சேகர், அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து தற்போது அழகிரி மீது தா.கிருட்டிணன் கொலை வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications