புதுவை திமுக தொகுதி உடன்பாடு ஓவர்?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு உறுதியாகி விட்டதாகத் தெரிகிறது. அதன்படி திமுகவும், பாமகவும் மொத்தமாக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளிலும் போட்டியிடும் எனத் தெரிகிறது.
அதே போல கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறும் என்றும் தெரிகிறது.தமிழகத்தைப் போலவே புதுவையிலும் சட்டசபைத் தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதே கட்சிகள் புதுவையிலும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.
தொகுதி உடன்பாடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்ற போதிலும் மிக ரகசியமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு ஏறக்குறைய உறுதியாகி விட்டதாகத் தெரிகிறது.
புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. திமுக கூட்டணியில் பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளைத் தர வேண்டும், இல்லாவிட்டால் கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றன. ஆனால் அவை எதிர்பார்க்கும் இடங்களை கொடுக்க காங்கிரஸும், திமுகவும் சம்மதிக்காது எனத் தெரிகிறது. எனவே இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் நீடிக்கும் வாய்ப்பில்லை.
இதுதவிர பாண்டிச்சேரியில் பாமக இந்த முறை எப்படியும் ஆட்சி அமைத்து விடுவது என்று தீவிரமாக இருந்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மும்முரமாக உள்ளது. இவர்கள் இருவரிடமும் போட்டியிடுவதற்குப் பதிலாக கட்சியை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் போட்டியிட திமுக நினைக்கிறது.
இந்தப் பின்னணியில் தற்போது புதுவை தொகுதி உடன்பாட்டை திமுக வெற்றிகரமாக முடித்து விட்டதாக செய்திகள்வெளியாகின்றன. இதன்படி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும், திமுக மற்றும் பாமகஆகியவை மீதமுள்ள 16 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும் முடிவாகியுள்ளது.
தற்போது புதுவையில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் இம்முறை இதில் மாற்றம். அதாவது கூட்டணிஆட்சி அமைக்க திமுக, காங்கிரஸ், பாமக ஆகியவை முடிவு செய்துள்ளன.
திமுக, பாமகவுக்கு கூட்டாக ஒதுக்கப்பட்டுள்ள 16 இடங்களில் பாமகவுக்கு 6 இடங்கள் கிடைக்கலாம். இந்திய கம்யூனிஸ்ட்கட்சிக்கு ஒரு இடம் என முடிவாகியுள்ளதாம்.
புதுவை தொகுதி உடன்பாடு குறித்து இன்று இரவு அல்லது நாளை முறைப்படியான அறிவிப்பு வெளியாகக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தொகுதிப் பங்கீடு உறுதியானால், கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகிவிடும்.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. காங்கிரஸ், தமாகா ஆகியவை ஒரு அணியாகவும்,திமுக தனித்தும் போட்டியிட்டன.












Click it and Unblock the Notifications