தமிழக அரசை தட்டிக் கேட்பேன்: வாசன்
டெல்லி:
மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ள தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகளை தட்டிக் கேட்பேன் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவரான வாசன் கடந்த 29ம் தேதி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து இன்று தனது அலுவலகத்திற்குச் சென்று அமைச்சர் பொறுப்பை முறைப்படி ஏற்றார்.இப்பொறுப்பில் இதுவரை இருந்து வந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், வாசனை வரவேற்று அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர் வாசனுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்து ஆளுயர மாலை அணிவித்தனர். பின்னர் முதல் கோப்பில் கையெழுத்திட்டார் வாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசின் திட்டங்கள் முறைப்படி அமல்படுத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கவுள்ளேன். சேது சமுத்திரம் உள்ளிட்ட பல திட்டங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி நிறைவேற்றப்படும்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் முறைப்படி நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு உள்ளிட்ட சில அரசுகள் இதை சரிவர செய்வதில்லை. அதுபோன்ற மாநில அரசுகளை நான் தட்டிக் கேட்பேன், விளக்கம் கேட்பேன்.
தமிழக நலனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். தமிழக நலனுக்காக எனது அமைச்சர் பதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்வேன் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications