ஊழியர்கள் ஸ்டிரைக்-நாறும் விமான நிலையங்கள்
சென்னை:
விமான நிலைய ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழக விமானநிலையங்கள் குப்பைக் களமாக மாறி பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளன.
மும்பை, டெல்லி விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இந்தியா முழுவதும் 136 விமான நிலையங்களின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.இந்த வேலை நிறுத்தம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றாலும் கூட சரக்குகள் கையாளுதல், விமான நிலைய பராமரிப்பு ஆகிய முக்கியப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
துப்புறவுத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான நிலையங்கள் சுத்தப்படுத்தப்படாமல் குப்பை நிறைந்து கிடக்கின்றன. கழிவறைகளும் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்கள் பெரும் குவியலாக காணப்படுகிறது. இதனால் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற சென்னை விமான நிலையம் நாறிக் கிடக்கிறது.
இதே நிலைதான் கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களிலும் காணப்படுகிறது. விமான நிலையங்கள் அசுத்தமாகக் காணப்படுவதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல விமானங்கள் மூலம் வரும் சரக்குகளும் பெருமளவில் குவிந்து கிடப்பதால் சென்னை விமான நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.