நிலநடுக்கம்: நள்ளிரவில் அதிர்ந்த அந்தமான்
போர்ட் பிளேர்:
அந்தமான் தீவுகளில் நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. இருப்பினும் இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கடும் நில நிடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. மின்சாரம் தடைபட்டது.வீடுகள் பயங்கரமாக ஆடியதால் அயர்ந்து தூங்கிக் காண்டிருந்த பொதுமக்கள் பீதியடைந்து வெளியே ஓடிவந்தனர். மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டது.இதனால் பலர் கடலைப் போய்ப் பார்த்தனர். ஆனால் கடல் அமைதியாக காணப்பட்டது. அலைகள் கூட இல்லாமல் இருந்ததால், சுனாமி வருவதற்கான வாய்ப்பில்லை என்று மக்கள் அமைதியடைந்தனர்.
இருப்பினும் கடந்த சுனாமி தாக்குதலுக்குப் பிறகு அந்தமானில் ஏற்பட்டுள்ள நில நடுக்கங்களிலேயே இதுதான் அதிக அதிர்வைத் தந்தது என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் நிலவுகிறது. இன்றைய நில நடுக்கம் ரிக்டர்அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.
அந்தமானைப் போலவே ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்கும் கட்டடங்கள் ஆட்டம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.