For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜோசியத்தை நம்பி..கேப்டனுக்கு ஸ்டாலின் சூடு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

நீங்கள்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு ஜோசியர் சொல்லி விட்டதால் அதை நம்பி கட்சி ஆரம்பித்துள்ளார்கள் சிலர் என்று நடிகர் விஜயகாந்த்தை மீண்டும் தாக்கினார் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியின் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், நீங்கள்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு ஜோசியர் கூறி விட்டார். இதை நம்பி கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

பெரும்பாலான கட்சிகள் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் பிறக்கின்றன. எல்லாம் தேர்தலில் ஏதாவது ஆதாயம் அடைய வேண்டும் என்ற ஆசையினால்தான். ஜாதி பெயரைச் சொல்லி, சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

திமுக தொண்டர்களுக்குள் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதை தேர்தல் நேரத்தில் பெரிதுபடுத்தி நம்மை நாமே அழித்து விடக் கூடாது. குடும்பம் என்றால் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என பிரச்சினைகள் இருப்பதில்லையா? அதுபோலத்தான் இதுவும், உட்கார்ந்து பேசினால் சரியாகி விடும் என்றார்.

முன்னதாக மதுரை மாநகரில் உள்ள சட்டசபைத் தொகுதிகளின் திமுக செயல்வீரர்கள் கூட்டம் மதுரை தமுக்கம் மைதான கூட்ட அரங்கில் நடந்தது. இதில் ஸ்டாலின் பேசுகையில்,

ஐந்தாவது முறையாக கருணாநிதியை முதல்வர் பதவியில் அமர்த்தும் வரை நாம்தொய்வின்றி பாடுபட வேண்டும். தமிழக மக்களும் கருணாநிதி முதல்வராவதைத்தான் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

இக்கூட்டத்திற்கு அதிக அளவில் பெண்கள் வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. திமுக ஆட்சி பெண்கள் நலனுக்காக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்தது. பெண்களுக்கு சொத்துரிமை, விதவை மறுவாழ்வுத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு என திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தத் திட்டங்கள் அத்தனையும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. நமக்கு நாமே திட்டம், உழவர் சந்தைத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டது ஜெயலலிதா ஆட்சி.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்தான், முதல்வராக கருணாநிதி ஆட்சிப் பீடத்தில் ஏறினால்தான் இழந்த திட்டங்களையும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இழந்த சலுகைகளையும் மீண்டும் பெற முடியும்.

அதிமுக அரசின் நான்காண்டு கால அவலங்களையும், மக்கள் பட்ட வேதனைகளையும் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். மக்கள் பட்ட அவதிகளை போக்க மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார் ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மதுரை மேயர் செ.ராமச்சந்திரன், முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X