அதிமுக எதிர் ஓட்டுக்கள் சிதறக் கூடாது-ராமதாஸ்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகளுடன் சேர்ந்து 3வது அணி அமைக்கும் வாய்ப்பே இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து 3வது அணியை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு பக்கம் வைகோ டென்சன் கொடுத்து வரும் நிலையில் திருமாவின் இந்தப் பேச்சு திமுக அணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இந் நிலையில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பாமகவோடு இணைந்து மாற்று அணி உருவாக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எங்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, அவரது நட்புக்கு நான் தலைவணங்குகிறேன். அதேசமயம், இப்போது மாற்று அணி குறித்துப் பேச நேரமில்லை. அதிமுக ஆட்சிக்கு எதிராக அனைவரும் போராடி வருகிறோம். இந்த சமயத்தில் அதிமுகவுக்கு எதிரான சக்திகள் சிதறிப் போய் விடக் கூடாது.
தமிழகத்தின் நலனையும், தமிழக மக்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தல் வரப் போகிறது. இந்த நேரத்தில் எதிர்ப்பு சக்திகள் பிளவுபட்டால் அது அதிமுகவுக்கு சாதகமாகி விடும். அதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது.
இம் முயற்சியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். இதில் தர்மசங்கடம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
ராமதாஸ் கூறியுள்ளது கருணாநிதிக்கும் பொருந்தும். காரணம், கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதற்கு கருணாநிதி உடன்பட மறுத்து வருகிறார். எனவேதான் திருமாவளவன் மூன்றாவது அணி குறித்துப் பேசத் தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications