எப்ஐஆர்: போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை:
போலி எப்.ஐ.ஆர். விவகாரம் வெளியாகி ஒன்றரை மாதங்களைக் கடந்தும் இன்னும் எந்தவித விசாரணையும் நடைபெறாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று சிபிசிஐடி போலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில அச்சங்களின் உதவியோடு போலீசாரே போலியாக எப்.ஐ.ஆர். புத்தகங்களை அச்சிட்டு காவல் நிலையங்களில் வினியோகித்தும், அந்த எப்ஐஆர்களை வைத்துக் கொண்டு புகார் கொடுக்க வந்தவர்கள், புகார் போடப்பட்டவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பேசி பணம் பறித்து வந்தனர்.போக்குவரத்துக் காவலர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் போலி எப்ஐஆரைக் காட்டி வாகன ஓட்டிகளை மிரட்டி வழிப்பறிக் கொள்ளை அடித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் போலீசாரே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால் இதை தமிழக காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது, இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பிஷா மற்றும் நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு கோபமடைந்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,
இந்த சம்பவம் வெளியாகி ஒன்றரை மாதங்களாகி விட்டது. போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதே தெரியவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய ஏன் இத்தனை தாமதம்?
வழக்கில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எப்.ஐ.ஆர். புத்தகங்களை தனியார் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி கொடுத்தது யார்? யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த உத்தரவு கொடுக்கப்பட்டது? இதற்கெல்லாம் சிபிசிஐடி அதிகாரிகள் விளக்கம் அளித்தாக வேண்டும் என்றார் கோபமாக.
பின்னர் மனுதாரர் கோரிக்கைப்படி வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.