மார்ச் 3ல் கூடும் திமுக பொதுக் குழு
சென்னை:
திமுக பொதுக் குழுக் கூட்டம் மார்ச் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாநல மாநாடு திருச்சியில் மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை, திமுக தேர்தல் அறிக்கை ஆகியவை வெளியிடப்படவுள்ளன.இந் நிலையில் திக பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மார்ச் 3ம் தேதி காலை 10 மணிக்கு திமுக பொதுக் குழு மாநாடு திருச்சியில் நடைபெறும். சிந்தாமணி பகுதியில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் இந்த பொதுக் குழுக் கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இழக்கும் தொழிற்சாலைகள்- கருணாநிதி
முன்னதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி,
அனைத்துத் தரப்பு மக்களின் சலுகைகளைப் பறித்த ஜெயலலிதா இப்போது தேர்தல் வருவதால் மீண்டும் வழங்குவதாக சொல்கிறார். மீண்டும் அதை திரும்ப எடுத்துக் கொள்ளார் மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் சைக்கிள்களை தான் வழங்குவதாகக் கூறிக் கொள்கிறார்.
ஜெயலலிதாவின் மெத்தனத்தால் ரூ. 13,500 கோடி மதிப்பிலான செமி கண்டெக்டர் ஆலை ஆந்திராவுக்குப் போய்விட்டது. இதனால் பல லட்சம் வேலைகளும் தமிழகத்தை விட்டுப் போய்விட்டன.
20,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஷீ தயாரிக்கும் ஆலைக்கும் அனுமதி வழங்காமல் இழுத்தடித்தார் ஜெயலலிதா. இதனால் அதுவும் ஆந்திராவுக்கே போய்விட்டது.
ஐ.இ.எம்.சி. எலெக்ட்ரானிக் தயாரிப்பு ஆலையை துவங்க வந்தவர்கள் ஜெயலலிதாவுக்கும் அரசுக்கும் நூறு முறை தொலைபேசியிலும் இ-மெயிலிலும் தொடர்பு கொண்டும் அரசிடம் இருந்து சாதகமான பதில் வராததால் மத்திய அரசுடம் போய் கூறியுள்ளனர்.
இது தான் ஜெயலலிதா ஆட்சியின் உண்மையான லட்சணம். இதே போக்கில் போனால் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி ஓடிப் போய்விடும் என்றார் கருணாநிதி.