லீலாவதி மகளுக்கு வேலை-நிதியுதவி தந்த ஜெ
சென்னை:
மதுரையில் திமுகவினரால் வெட்டிக் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் லீலாவதியின் மூத்த மகள் கலாவதிக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை மற்றும் ரூ. 1 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் வில்லாபுரம் வார்டு கவுன்சிலராக இருந்தவர் லீலாவதி கடந்த 1997ம் ஆண்டு இவர் திமுகவினரால் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.தமிழகத்தையை உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு லீலாவதி குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது.
திமுக அளித்த நிதியுதவியை லீலாவதி குடும்பம் நிராகரித்து விட்டது. ஆனால், அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போதிய அளவுக்கு நிதியுதவி வழஙகியது. லீலாவதியின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் லட்சக்கணக்கில் நிதியுதவி தந்ததோடு, மாதந்தோறும் உதவியும் வழங்கினர்.
ஆனாலும் லீலாவதியின் குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சோகத்துக்கு மேல் சோகமாக, லீலாவதியின் இளைய மகள் துர்காவதி கடந்த ஆண்டு வறுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில், லீலாவதியின் மூத்த மகள் கலாவதி, தான் மிகவும் வறுமையில் வாடி வருவதாகவும், அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்படும் நிலையில் இருப்பதால் தனக்கு உதவுமாறு கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தேர்தல் வரும் நிலையில் இந்தக் கோரிக்கைப்ை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா கலாவதியை சென்னைக்கு வரவழைத்தார். தலைமைச் செயலகம் வந்த கலாவதிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.
மேலும், மதுரை தியாகராஜர் நன்முறை மேல் நிலைப்பள்ளி சத்துணவுக் கூடத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான பணி நியமன உத்தரவையும் அவரிடம் வழங்கினார்.