ஜெயலலிதா சிறந்த நடிகை: ராமதாஸ் பாராட்டு
சென்னை:
வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் தேர்தல் சமயங்களில் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் ஒன்றை சொல்லத் தவற மாட்டேன். செய்தியாளர்களே உங்களது நாட்குறிப்பின் ஒரு ஓரத்தில் நான் சொன்னதாக இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், திக கூட்டணியே வெற்றி பெறும்.அதிமுக சார்பில் ஒருவர் கூட வெற்றி பெற்று சட்டசபையில் அமர மாட்டார். இதை ராமதாஸ் சொன்னதாக, இன்றைய தேதியைக் குறிப்பிட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்வது கண்டிப்பாக நடக்கும்.
தமிழக அரசின் மொத்த நிதியிருப்பு ரூ. 26,000 கோடிதான். ஆனால் முதல்வர் ஜெயலலிதா தினசரி அறிவித்து வரும் திட்டங்கள், சலுகைகளை நிறைவேற்ற வேண்டுமானால் குறைந்தது ரூ. 40,000 கோடி தேவைப்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவே மக்களை ஏமாற்றும் விதத்தில்தான், தேர்தல் ஆதாயத்திற்காகாவே சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் ஜெயலலிதா.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குவது என்பதை கூட்டணித் தலைவர் கருணாநிதிதான் முடிவு செய்வார். இப்போது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. யார் வரக் கூடாது என்பதுதான் முக்கியம்.
மக்கள் கூட்டணி, மக்கள் கூட்டணி என்று பேசி வந்த ஜெயலலிதா இப்போது திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியாவது வெளியேறாதா, நம்முடன் கூட்டணி வைத்துக் கொள்ளாதா என்று அலைவது ஏன்? தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது தானே?
நல்ல நடிகையான ஜெயலலிதா, தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். ஆனால் மக்களை அவ்வளவு சீக்கிரத்தில் ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது.
விடுதலைச் சிறுத்தைகளை திமுக கூட்டணியில் சேர்க்க கருணாநிதியுடன் பேசி வருகிறேன். சில நாட்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
கூட்டணியை விட்டு மதிமுக விலகப் போகிறது என்பதெல்லாம் வதந்தி தான். இந்த வதந்திகளுக்கு மூலகாரணமாக இருப்பவர் உளவுத்துறையில் இருக்கிறார். உளவுத்துறைக்கும் கூட சில நெறிமுறைகள் உண்டு. ஆனால், அதையெல்லாம் அந்தத் துறை தூக்கி எறிந்துவிட்டு அதிமுக கருவி போல செயல்படுகிறது.
உளவுத்துறையில் உள்ள பிற அதிகாரிகளும் அவருக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளும் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றார் ராமதாஸ்.