ஜீவசமாதி ஆக முயன்ற இளம் சாமியார் மீட்பு!
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உயிரோடு சமாதி ஆக முயன்ற சாமியாரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில்சேர்த்தனர். அவர் ஜீவ சமாதி ஆக முயன்றதை தடுக்காமல் இருந்த சாமியாரின் பெற்றோர் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம் ஆவாரம்பட்டி மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் ராமர். இவரது மகன் முரளிகிருஷ்ணன். பொறியியலில்டிப்ளமோ படித்துள்ளார். படிப்புக்குப் பின்னர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.பின்னர் வேலையை உதறி விட்டு திருவண்ணாமலை சென்று துறவறம் பூண்டார். காவி உடை தரித்து சன்னியாசி கோலத்திற்குமாறிய முரளி கிருஷ்ணன், சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு 10 சீடர்களும் உருவாகினர். கடந்த ஒன்றரை மாதமாக முரளிகிருஷ்ணன் சாப்பிடாமல், கொள்ளாமல் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி வாழ்ந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, நான் இறைவனுடன் ஐக்கியமாகப் போகிறேன். ஜீவ சமாதி அடையப் போகிறேன். எனக்கு சமாதிகட்டுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது பூஜை அறையில் குழி தோண்டப்பட்டது.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணிக்கு குழிக்குள் இறங்கினார் முரளி கிருஷ்ணன்.உள்ளே அமர்ந்து கொண்ட அவர், இறைவனுடன் ஐக்கியமாகப் போகிறேன். பிற்பகல் 12 மணியளவில் ஜோதி ரூபமாகஉங்களுக்குக் காட்சி தருவேன் என்று கூறி விட்டு தியானத்தில் இறங்கினார்.
பின்னர் அந்தக் குழியை பலகை வைத்து மூடி பின்னர் சிமென்ட்டால் பூசி விட்டார்கள். 12 மணிக்கு ஜோதி ரூபமாக வருவார் முரளிகிருஷ்ணன் என்று மக்கள் காத்திருந்தனர். ஆனால் ஒரு ஜோதியையும் காணவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து முரளி கிருஷ்ணனை குழிக்குள் வைத்துமூடியது சட்ட விரோதம் என்று கூறி குழியிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்கு முரளி கிருஷ்ணனின் பெற்றோர் மற்றும்உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதையும் மீறி போலீஸார், சிமென்ட் பூச்சை உடைத்து குழிக்குள் இருந்த முரளி கிருஷ்ணனை வெளியே கொண்டுவந்தனர். உள்ளே மயங்கிக் கிடந்தது சாமி முரளி கிருஷ்ணன்.
இதையடுத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அவரை குழிக்குள் வைத்துப் பூட்டிதற்கொலைக்கு தூண்டியதாக கூறி முரளி கிருஷ்ணனின் பெற்றோர் ராமர், மகேஸ்வரி உள்ளிட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.