காளிமுத்து சொல்வது சரியே: நாஞ்சில் சம்பத்
பழனி:
பொடா சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்ட விவகாரம் அதிமுக, மதிமுக உறவுக்கு தடையாக இருக்கக் கூடாது என்று அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சம்பத் பேசுகையில், மதிமுகவோடு உறவு வைத்துக் கொள்ள வைகோவின் கைது படலம் தடையாக இருக்கக் கூடாது என்று அண்ணன் காளிமுத்து கூறியுள்ளார்.அப்படி ஒன்று நடந்து விடுமானால் என்று கூறி சில கதைகளையும் சொல்லியுள்ளார். அதையும் ஏற்றுக் கொள்கிறேன், வரவேற்கிறேன். அழைப்பு விடுத்ததற்கு நன்றி கூறுகிறேன்.
அதிமுக கூட்டணியில் கதவுகள் திறந்தே இருப்பதாக முதல்வர் ஜெயலிலதா கூறியுள்ளார். அது அவரது பெருந்தன்மை. எங்களை அவர் மதிக்கிறார் என்பதே இதன் பொருள்.
இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் தொண்டர்களால் இயக்கப்படுகிற ஒரே கட்சி மதிமுக மட்டும்தான். தொண்டர்கள் முன்மொழிவதை வழி மொழிபவர் எங்கள் தலைவன் வைகோ.
19 மாத காலம் கட்சித் தலைவன் சிறையில் இருந்தபோதும், சூடு, சுருதி குறையாமல் நடமாடிய வைகோவின் தொண்டர்களைப் போல வேறு யாரையும் பார்க்க முடியாது. மதிமுகவை அலட்சியப்படுத்திவிட்டு இனி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி மதிமுக. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வகையில் எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும். 50 தொகுதிகளை நாங்கள் திமுக கூட்டணியில் எதிர்பார்க்கிறோம் என்றார் சம்பத்.
மதிமுக கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை இருபத்து ஐந்தில் ஆரம்பித்து முப்பதாகி இப்போது ஐம்பதாகிவிட்டதால் திமுக மண்டைக் காய்ச்சலில் உள்ளது.












Click it and Unblock the Notifications