தொகுதிக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா திட்டம்
திண்டிவனம்:
சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ. 2 கோடி பணத்தை செலவிட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓட்டுக்களை விலைக்கு வாங்க சட்டசபைத் தேர்தலில் பணத்தை வாரி இறைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.அதாவது ஒரு தொகுதிக்கு ரூ. 2 கோடி வரை அவர்கள் செலவிடத் திட்டம் தீட்டியுள்ளனர். இது குறைந்தபட்ச தொகையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இது கூடவும் செய்யலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யவுள்ளோம்.
தேர்தல் ஆணையம் அதிமுகவின் தேர்தல் செலவுகள் குறித்து தீவிரமாக கண்காணிக்க கோரப் போகிறோம்.
கடந்த நான்கரை ஆண்டு கால அதிமுக ஆட்சியின் ஊழல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
நுழைவுத் தேர்வு தொடர்பான சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து விட்டார். இருப்பினும் இன்னும் புதிய திட்டம் தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு எதையும் வெளியிடாமல் உள்ளது. உடனடியாக அதை செய்ய வேண்டும் என்று கூறினார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications