கூட்டணிக்குத் தடை கோரி ஒரு வழக்கு!
மதுரை:
அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கிராமம் என்ற பகுதியைச் சேர்ந்த நாஞ்சில் மக்கள் நல்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் ஐயப்பன் என்பவர் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, அரசியல் கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீட்டுச் சட்டம் 1968ன் கீழ் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சட்டங்களின்படி அரசியல் கட்சி ஒன்றை அங்கீகாரம் செய்ய சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஒரு கட்சி 5 ஆண்டுகள் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 30 உறுப்பினர்களில் ஒருவரும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 25 உறுப்பினர்களில் ஒருவரும் அக்கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை அந்தக் கட்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும்.
சட்டம் இப்படி இருக்க, இப்போது அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதனால் ஒவ்வொரு கட்சியும் பெற்ற சரியான வாக்கு சதவீதத்தைக் கணக்கிட முடியாது.
மேலும் அண்மையில் 9 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இது என்ன ஆனது என்று தெரியவில்லை.
மதிமுக, பாமக உள்ளிட்ட சில கட்சிகளின் அங்கீகாரம் கேள்விக்குரியாக உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அவை எப்படி இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக நீடிக்கின்றன என்று தெரியவில்லை. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும். ஆனால் இதை தேர்தல் ஆணையம் வலியுறுத்தாமல் உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் இல்லை. எனவே அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குலசேகரன், கிருஷ்ணன் ஆகியோர், இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி டிஸ்மிஸ் செய்தனர்.












Click it and Unblock the Notifications