துணை முதல்வர் இல்லை: வைகோ நிபந்தனை ஏற்பு
திருச்சி:
தொகுதிப் பங்கீட்டில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சி திமுக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட கருணாநிதி இன்று காலை திருச்சி வந்தார்.திருச்சியில் மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை திமுக மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சமீபத்தில் திமக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். இந் நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட கருணாநிதியும் இன்று காலை திருச்சி வந்தார்.
அவருடன் ஸ்டாலின், துரைமுகன் ஆகியோரும் வந்தனர். விமானம் மூலம் திருச்சி வந்த கருணாநிதியை, திமுகவினர் திரளாக கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருச்சி-புதுக்கோட்டை மெயின் ரோட்டில் விமான நிலையம் அருகே 200 ஏக்கர் பரப்பில் நடந்து வரும் மாநாட்டு ஏற்பாடுகளை கருணாநிதி பார்வையிட்டார்.
இங்கு பந்தல் மட்டுமே 100 ஏக்கர் பரப்பளவுக்குப் போடப்பட்டு வருகிறது. மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையிலான திமுகவினர் இரவு பகலாக இந்தப் பகுதியில் முகாமிட்டு மாநாட்டு வேலைகளில் மூழ்கியுள்ளனர்.
இந்த மாநாட்டில் தான் திமுகவின் தேர்தல் அறிக்கையும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகளின் எண்ணிக்கையையும் வெளியிடப்படவுள்ளது.
இதனால் இந்த மாநாடு திமுக தேர்தல் பிரச்சாரத்துக்கான பிள்ளையார் சுழியாக இருக்கப் போகிறது.
மாநாட்டுத் திடலின் முகப்பில் கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் 82 அடி உயர கொடிக் கம்பமும் வைக்கப்பட்டு வருகிறது.
மேடைப் பகுதி, மாநாட்டுத் திடல், பந்தல் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்ட கருணாநிதி பின்னர் மத்திய அமைச்சர் ராசா, நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து சங்கம் ஹோட்டலுக்குச் சென்று கட்சியினருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
விட்டுக் கொடுத்து பங்கீடு:
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தொகுதிப் பங்கீட்டின்போது விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம். எங்களது தொகுதிகளை குறைத்துக் கொண்டு தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். அதேபோல கூட்டணிக் கட்சிகளும் தியாகத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்னை நாளை சந்திக்கிறார். பாமகவுக்கு கொடுக்கப்படும் தொகுதிகளில் சிலவற்றை விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள் ஒதுக்கீடு செய்தால் அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம். திமுக ஆட்சிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் மீண்டும் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து வாக்காளப் பட்டியலிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை உள்ளிட்ட வெளிநிாட்டு விவகாரங்களில் மத்திய அரசின் நிலையை திமுக வரவேற்கிறது, ஆதரிக்கிறது. இலங்கைத் தமிழர் மீது எங்களுக்குக் கவலை இல்லை என்று யாரும் எண்ணி விடக் கூடாது, எங்களுக்கும் அந்தக் கவலை உள்ளது என்றார் கருணாநிதி.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு சட்டசபைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications