மத்திய அமைச்சர் உறவினர் மீது துப்பாக்கி சூடு!
சென்னை:
திமுகவைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதியின் உறவினர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
மத்திய சட்டத்துறை இணை அமைச்சராக உள்ளார் வேங்கடபதி. இவரது சகோதரியின் மகன் நாகராஜன். சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நாகராஜன், தனது மனைவி விமலா, மகன் ஸ்ரீதர், மகள் பிரியங்கா ஆகியோருடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.குடிநீர் வினியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் நாகராஜன், தனது அலுவலகத்திலிருந்து கீழ் தளத்துக்கு வந்து கொண்டிருந்தார். கீழே வந்த பின்னர் தனது காரை நோக்கி அவர் போக எத்தனிக்கையில், அடையாளம் தெரியாத இரண்டு பேர் அங்கு வந்து நாகராஜனை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அவரது விலா பகுதியில் குண்டு பாய்ந்து வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
துப்பாக்கியால் சுட்டவர்களை பிடிக்க அலுவலக ஊழியர் ராவ் பிடிக்க முயற்சித்தார். ஆனால் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
நாகராஜனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கூட அவரது இடது பக்க விலா எலும்பு உடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தொழில் முன்விரோதம் அல்லது குடும்ப சொத்துப் பிரச்சினை காரணமாக நாகராஜன் சுடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
பெண் ஐபிஎஸ் தொடர்பு?
இதற்கிடையே நாகராஜனுக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொடர்பு உள்ளதாகவும், அதை விரும்பாத அந்த அதிகாரியின் குடும்பத்தினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications