தயாரிப்பாளர்கள் புகாரை மறுக்கிறது சன் டிவி
சென்னை:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படையற்றவை என்று சன் டிவி நிறுவனம் மறுத்துள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெருமளவில் நிஷ்டம் ஏற்படுத்தும் வகையில் சன் டிவி நடந்து கொள்வதாகவும், திரைத் துறையை அழிக்க சன் டிவி மும்முரமாக இறங்கியுள்ளதாகவும், சன் டிவிக்கென படங்களை வாங்கி விட்டு தனது குழுமத்தின் பிற தொலைக்காட்சிகளிலும் அப்படங்களைப் போட்டு சட்ட மீறலில் ஈடுபடுவதாகவும் தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு நஷ்ட ஈடாக ரூ. 2,000 கோடியை சன் டிவி தர வேண்டும் என்று கோரி வழக்குப் போடப் போவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்தப் புகார்கள் அனைத்தையும் சன் டிவி நிறுவனம் மறுத்துள்ளது. அந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில்,
எங்களைப் பொருத்தவரை எந்தவித விதி மீறலிலும் நாங்கள் ஈடுபடவில்லை.
படங்களை வாங்கும்போது போடப்படும் ஒப்பந்தங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. அதில், உலகளவிலான தொலைக்காட்சி ஒளிபரப்பு, தரை வழி ஒளிபரப்பு, டி.டி.எச். முறை மூலமான ஒளிபரப்பு உள்ளிட்ட சகல வழிகளிலும் ஒளிபரப்புவதற்கான ஒட்டுமொத்த உரிமை என்ற வாசகம் எங்களது அனைத்து ஒப்பந்தங்களிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் முழு மனதுடன்தான் கையெழுத்திட்டுள்ளனர். இப்போது அவர்களே அதை மறுப்பது நியாயமல்ல.
திரைப்படங்களை வாங்குவதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.100 கோடியை நாங்கள் செலவிடுகிறோம். படங்களை நாங்கள் விலை கொடுக்காமல் வாங்குவதில்லை. இதுவரை 3,000க்கும் மேற்பட்ட படங்களை விலை கொடுத்துத்தான் வாங்கியுள்ளோம்.
திரை விமர்சனம் என்ற பெயரில் படங்களுக்குப் பாதகமாக விமர்சனம் செய்வதாக கூறப்படுவதில் உண்மையில்லை. உண்மையில், எங்களது விமர்சனங்களைப் பார்த்துத்தான் மக்கள் படம் பார்க்கவே வருகின்றனர்.
மோசமான பல படங்கள் எங்களது விமர்சனத்தின் எதிரொலியாக நன்றாக ஓடி நல்ல வசூலைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளன.
திரை விமர்சனம் என்பது தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் தரும் இலவச விளம்பரம் போல. விளம்பரம் இல்லாமல் எந்தப் பொருளும் விற்பனை ஆகாது என்பது உலக இயல்பு.
பட உரிமை இல்லாத படங்களின் பாடல்களை நாங்கள் ஒளிபரப்புவதாக கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால், நாங்கள் வாங்கி வைத்துள்ள படங்களில் இடம் பெறும் பாடல்களை பல தொலைக்காட்சிகள் அடிக்கடி ஒளிபரப்புகின்றன.
ஆனால் அதை நாங்கள் பெரிதுபடுத்துவதில்லை, பெருந்தன்மையோடு விட்டு விடுகிறோம்.
அனைத்துப் படங்களுக்கும் ஒரே மாதிரியான விலையை தர முடியாது. அது இயலாத காரியமும் கூட. அஜீத் படத்திற்கும், சாதாரண ஒரு புதுமுகம் நடித்திருக்கும் படத்திற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா, இரு படங்களுக்கும் ஒரே விலை தர முடியாதே!.
திரையுலகுக்கும், டிவிக்கும் இடையிலான இந்தப் பனிப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நிம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications