செல்போனில் ஆசிரியையை படம் பிடித்த மாணவர்!
கோவை:
பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியையை, அவருக்குத் தெரியாமல் செல்போன் கேமரா மூலம் படம் பிடித்த மாணவர் கல்லூரியிலிருந்து நரந்தரமாக நீக்கப்பட்டார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்தது.அங்கு பிபிஎம் இரண்டாவது ஆண்டு படித்து வந்தார் அந்த மாணவர். சம்பவ நாளன்று அவரது வகுப்பு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த செல்போன் கேமராவால் படம் பிடித்துள்ளார்.
அவர் படம் பிடித்து முடித்த பின்னரே அதை ஆசிரியை பார்த்தார்.
உடனடியாக அந்த மாணவரின் செல்போனைப் பறிமுதல் செய்த ஆசிரியை பின்னர் அந்த மாணவரை கல்லூரி முதல்வரடம் அழைத்துச் சென்று புகார் கூறினார்.
முதல்வரின் அறையில் செல்போனில் உள்ள படங்களைப் பரிசோதித்தபோது, ஆசிரியையை பல கோணங்களில் அந்த மாணவர் படம் எடுத்து வைத்ததிருந்தது உறுதியானது.
ஆசிரியை கரும்பலகையில் எழுதும்போது, குனியும்போது உட்காரும் போது, நடக்கும்போது என பலவிதமான போஸ்களில் அந்த மாணவர் கீழ்த்தரமாக படம் பிடித்து வைத்திருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவரின் பெற்றோரை வரவழைத்தது. நடந்த சம்பவத்தைக் கூறி மாணவரின் டி.சி (இடமாற்றச் சான்றிதழ்) உள்ளிட்டவற்றைக் கொடுத்து மாணவரை கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்தனர்.
(மாணவர், கல்லூரி, ஆசிரியையின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன)