கார்த்திக் நடத்தும் ரகசிய பொதுக்குழு!
சென்னை:
தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் ரகசியமாக இன்று மாலை சென்னையில் நடத்தப்படுகிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் குழம்பிப் போயுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை, பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பிஸ்வாஸுடன் சென்று கார்த்திக் சந்தித்ததால், திமுகவுடன் பார்வர்ட் பிளாக் கூட்டணி வைக்கும் என்று பேச்சு கிளம்பியது.இதற்கு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்த சந்தானம் எம்.எல்.ஏ, கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதிமுகவுடன்தான் கூட்டணி சேர வேண்டும் என்று வலியுறுத்திய அவர் கார்த்திக்கையும், பிஸ்வாஸையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து சந்தானம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு கார்த்திக் தள்ளப்பட்டுள்ளார்.
திமுகவுடன் கூட்டணி என்று பிஸ்வாஸ் கூறினாலும், பார்வர்ட் பிளாக்கைப் பொறுத்தவரை தமிழகத்தில் முக்குலத்தோர் கட்சியாகவே உள்ளது. அச் சமூகத்தில் பெரும்பான்மையோர் அதிமுகவையே ஆதரித்து வருகின்றனர்.
இதனால் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் கார்த்திக் குழம்பிப் போயுள்ளார். மேலும் திமுகவில் அதிகபட்சம் ஒரு சீட்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
அதே சமயம் கூட்டணிக்கு அதிமுகவிலிருந்தும் இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. சந்தானத்தை வைத்து புதிய பார்வர்ட் பிளாக்கை ஆரம்பித்து அவரையே தேர்தலில் ஆதரிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
இதனால் அடுத்து என்ன முடிவெடுப்பது என்று தெரியாத நிலையில் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை கார்த்திக் கூட்டியுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானத்தைத் தவிர மற்ற 32 உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வந்துள்ளனர்.
ஆனால் கூட்டம் எங்கே நடக்கிறது என்ற விவரம் கடிதத்தில் இல்லை. அதை ரகசியமாக வைத்துள்ளனர்.
இதனால் சென்னைக்கு வந்தவர்கள் தங்களது தொடர்பு எண்ணை கார்த்திக்கின் உதவியாளரிடம் தந்துவிட்டு காத்துக் கொண்டுள்ளனர்.
இடத்தை ஏன் கடிதத்தில் அறிவிக்கவில்லை என்று கேட்டபோது, கூட்டம் நடத்துவதற்கு இதுவரை சரியான இடம் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் அங்கு கூட்டம் நடத்தப்படும். இன்று கூட்டம் நடத்தப்படுவது உறுதி. போன் மூலம் உறுப்பினர்களுக்கு கூட்டம் நடக்கும் இடம் தெரிவிக்கப்படும் என்று கார்த்திக் தரப்பு கூறுகிறது.
அதிமுக பின்னணி கொண்ட சந்தானத்தின் ஆதரவாளர்களால் கூட்டத்துக்குப் பிரச்சனை ஏற்படும் என்ற பயத்தில்தான் கூட்டம் நடக்கும் இடத்தை கார்த்திக் ரகசியமாக வைத்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த முறை தனது கட்சியின் தலைவர் பிஸ்வாஸையே ஒரு ரூமில் போட்டு பூட்டிவிட்டு கூட்டம் நடத்தியவர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மூச்சு முட்டிப் போன பிஸ்வாஸை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார் கார்த்திக்.
இன்று தனது கூட்டதுக்கும் சந்தானமும் அதிமுகவினரும் பிரச்சனை தரலாம் என்பதால் இடத்தை படு ரகசியமாக வைத்துள்ளார் கார்த்திக்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக உறுப்பினர்களுடன் கார்த்திக் விரிவாக விவாதிக்கவுள்ளார்.