ஜெவை படம் எடுத்த இலங்கை மாணவர்!!
சென்னை:
திரைப்பட விருது வழங்கும் விழாவின்போது முதல்வர் ஜெயலலிதாவை புகைப்படம் எடுத்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் மாணவரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
2003, 2004ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டப அரங்கில் நடந்தது. இதில் திரையுலகமே ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து கலந்து கொண்டது.நிகழ்ச்சியில் ஜெயலலிதா அனைவருக்கும் விருதுகளை வழங்கினார்.
கூட்டம் நடந்த அரங்கில் 50க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்ததால், அதைப் பார்த்து முதல்வர் எரிச்சல்பட்டு விடக் கூடாது என்பதற்காக அரங்கத்திற்கு வெளியே திரை நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காக கூடியிருந்த கூட்டத்தினரில் 50 பேரை போலீஸார் உள்ளே அனுப்பி அந்த இருக்கைகளில் அமரச் செய்தனர்.
(ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு இப்படி இருக்கை நிரப்பும் வேலைகள் நடப்பது வழக்கம். அதையும் போலீசாரே தான் செய்வர்.)
நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கையில், வெளியில் இருந்து அழைத்து வரப்பட்டு உட்கார வைக்கப்பட்ட கூட்டத்திலிருந்து ஒரு வாலிபர் எழுந்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.
இதைப் பார்த்த போலீஸார் அந்த நபரை மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு சென்று கேமராவைப் பறித்தனர்.
அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்தது ஏன் என்று விசாரித்தனர். மேலும் விசாரணையில் அந்த மாணவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததும் போலீசார் மத்தியில் டென்சன் பரவியது.
அந்த மாணவரின் பெயலர் முகம்மது மஃப்ரத். தமிழரான இவரது அண்ணன் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது உறவினருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக மஃப்ரத் சென்னைக்கு வந்திருந்தார்.
இவர் கொழும்பில் உள்ள கல்லூரியில் சாட்டர்ட் அக்கவுண்டன்சி படித்து வருகிறார். திரை நட்சத்திரங்களைப் புகைப்படம் எடுத்து அதை கொழும்பில் உள்ள தனது நண்பர்களிடம் காட்டுவதற்காக புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்படியே ஜெயலலிதாவையும் புகைப்படம் எடுத்துள்ளார். போலீஸார் விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரிய வந்தன.
இருந்தாலும் சந்தேகம் நீங்காத போலீஸார் அந்த மாணவரை பிடித்துச் சென்றனர். மேல் விசாரணையில் மாணவர் அப்பாவி எனத் தெரிய வந்ததால் அவரை போலீஸார் விடுவித்து விட்டனர்.