"இனி பொன்னாடை வேண்டாம்".. கட்சிக்கு நிதி தாங்க.. மேடையில் சவுமியா சொன்னதும் அன்புமணி கூறிய வார்த்தை
சென்னை: ''மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். ஆனால் அதற்கு பதில் நம்முடைய கட்சிக்கு நிதியாகவே கொடுக்கலாம்'' என்று பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கூறினார். இதை கேட்டதும் அன்புமணி ராமதாஸ், ''கட்சியின் பார் கோட்டிற்கு ரூ.50 போட்டு ஸ்நாப்ஷாட் எடுத்து எங்களிடம் காண்பித்தால் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறோம்'' என்று கூறி மனைவி சவுமியாவின் விருப்பத்துக்கு பச்சை கொடி காட்டினார்.
சென்னையில் பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா அன்புமணி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சவுமியா அன்புமணி பேசும்போது கூறியதாவது:''நம்மை பார்க்கும்போது மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தும் வழக்கம் வைத்திருக்கிறோம். அது ரொம்ப நல்ல விஷயம் தான்.
கையெடுத்து கும்பிடுகிறோம். வணக்கம் சொல்கிறோம். மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அதற்கு பதில் நம்முடைய கட்சிக்கு நிதியாகவே கொடுக்கலாம். ஏனென்றால் பொன்னாடையை எந்த அளவுக்கு உபயோகப்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை'' என்றார்.
இதையடுத்து மேடையில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''என்ன சொல்கிறார் என்றால் யாரும் மற்றவர்களுக்கு ஷால் போடவேண்டாம். நம் கட்சியின் 'பார் கோட்' இருக்கிறது. அதில் ஒரு 50 ரூபாய் போடுங்கள்.
ஷால் ஒன்றை 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், சிலபேர் 1000 ரூபாய் கொடுத்து கூட வாங்குகிறீர்கள். அந்த பணத்தை வீணாக்க வேண்டாம். அந்த ஷால் வைத்து என்ன பண்ணப்போகிறோம்? அதற்கு பதில் கட்சியின் பார் கோட்டிற்கு ரூ.50 போட்டு ஸ்நாப்ஷாட் எடுத்து எங்களிடம் காண்பித்தால் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications