"நீட் வினாத்தாள் லீக் ஆனதை ஏற்க முடியாது.." ஓவராக பேசிய ஆசிரியரே நீட் வினாத்தாளை கசியவிட்டதாக கைது!
டெல்லி: 2024ல் நீட் வினாத்தாள் கசிந்தபோது மாணவர்களின் பாதுகாவலன் போலத் தன்னை காட்டிக் கொண்டு வழக்கு தொடர்ந்து வீடியோ எல்லாம் போட்ட ஒருவர், இப்போது நீட் வினாத்தாளைக் கசியவிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். யார் அவர்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்காகக் குரல் கொடுத்தவர் இப்போது சிக்கியது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தாண்டு நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்தது. இருப்பினும், தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகார் உறுதியானதைத் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் நீட் மறுதேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்பு நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடு முழுக்க போராட்டம் நடத்திய நபரே இப்போது நீட் வினாத்தாளைக் கசியவிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

நீட் சர்ச்சை
அதாவது கடந்த 2024 நீட் கேள்வித்தாள் கசிந்தது. அப்போது இது தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. அப்போது லத்தூரின் வேதியியல் ஆசிரியர் சிவராஜ் ரகுநாத் மோடேகாவோங்கர் என்பவர் மாணவர்களுக்காகக் குரல் கொடுத்தார். மாணவர்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறிய அவர், மாணவர்கள் சார்பில் வழக்குத் தொடர்ந்து தன்னை மாணவர்களின் பாதுகாவலர் போலக் கூட காட்டிக் கொண்டார்.. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் அதே ரகுநாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே மாணவர்களுக்கு நீதி கோரி 2024இல் ரகுலாந்த் குரல் கொடுத்த வீடியோ இப்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது. ஒரு காரில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் அவர் மாணவர்களிடம், சம்பாஜிநகரில் உள்ள உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்ததுள்ளதாகக் கூறியிருந்தார்.
என்னவெல்லாம் பேசினார் பாருங்க
அவர் மேலும், "நீட் 2024இல் பெரிய மோசடி நடந்துள்ளதால், மாணவர்களுக்குத் தனி மனு தாக்கல் செய்துள்ளோம். நீட் வினாத்தாள் கசிந்துள்ளது மகாராஷ்டிரா மாணவர்களையே பாதிக்கும். மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான தகவல்களைச் சேகரிப்போம். மகாராஷ்டிரா செய்திச் சேனல் பிரதிநிதிகளிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசுவோம். நீட் வினாத்தாள் கசிவு மாணவர்களை பாதிக்கும் நிலையில், இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற முற்படுவோம்.. குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியை எடுத்துரைப்போம்" என்று அவர் உருக்கமாகப் பேசியிருந்தார்.
ரேணுகை வேதியியல் கிளாஸ் என்ற பெயரில் கல்வி மையத்தை நடத்தி வருபவர் தான் இந்த சிவராஜ் ரகுநாத் மோடேகாவோங்கர்.. இந்தாண்டு நீட் கேள்வித்தாள் கசிவு வழக்கை சிபிஐ விசாரித்து வரும் சூழலில், இவர் கைது செய்யப்பட்டார். கடந்த மே 17ம் தேதி சிபிஐ சோதனையில் அவரது செல்போனில் நீட் வினாத்தாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டார்.
யார் இவர்?
இந்த ரகுநாத் லத்தூரின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் தனிப்பட்ட பயிற்சி அளித்து, மாணவர்கள் வீட்டிற்குச் சைக்கிளில் சென்றார். 1990களின் பிற்பகுதியில், பத்து மாணவர்களுடன் ஒரு வாடகை ரூமில் டியூஷன் சென்டரை தொடங்கினார். கையால் எழுதப்பட்ட குறிப்புகள், சிறிய குழுக்களுக்குப் பயிற்சி எனத் தனது தொடக்கக் காலத்தில் மாணவர்களுக்கு அதிகம் மெனக்கெட்டார். இதனால், போட்டித் தேர்வுகளில் பல வெற்றியாளர்களை உருவாக்கி, அவர் பிரபலமானார்.
பிரபலமடைந்தது எப்படி
அதன் பிறகு சமூக வலைத்தளங்களிலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார். இவருக்கு இப்போது இன்ஸ்டாகிராமில் 68,000க்கும் அதிகமான பலோயர்ஸ் உள்ளனர். யூடியூப், வாட்ஸ்அப், சொந்த ஆப் எனப் பல்வேறு கற்பிக்கும் முறைகளைக் கையாண்டார். இதன் மூலம் அவர் சீக்கிரமே பிரபலமடைந்தார். இதனால் மகாராஷ்டிரா முழுக்க நீட், ஜேஇஇ, சிஇடி-க்கு படிக்கும் மாணவர்கள் இவரிடமே வருகிறார்கள். மொத்தம் 9 டியூஷன் சென்டர்களை இவர் நடத்தும் சூழலில், ஆண்டுதோறும் சுமார் 40,000 மாணவர்கள் இதில் படிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications