For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆபிஸ் அருகே திண்டிவனமும் ஆபிஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக தலைமைக் கழகத்துக்கு பக்கத்திலேயே தனது புதிய கட்சிக்கும் ஒரு தலைமை அலுவலகத்தை இன்று திறந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி.

காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, அதிமுகவின் முழு ஆதரவுடன் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் என்ற பெயரில் புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று சென்னையில் திறக்கப்பட்டது. அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள லாயிட்ஸ் சாலை பகுதியிலேயே திண்டிவனத்தின் கட்சி அலுவலகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த ராமமூர்த்தி, கட்சியின் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். அதன்படி வழிகாட்டும் தலைவராக (??) முன்னாள் எம்.பி. பூவராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவராக திண்டிவனம் ராமமூர்த்தியும், துணைத் தலைவர்களாக சிங்கரா வடிவேலு, குடந்தை ராமலிங்கம், கலியபெருமாள், தண்டாயுதபாணி ஆகியோரும் இருப்பார்கள்.

முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன், மாரியப்பன், ஜெயபாலன், ராம. சிதம்பரம், புரசை கீதா, திருச்சி வேலுசாமி ஆகியோர் பொதுச் செயலாளர்களாக இருப்பார்கள்.

(இதில் திருச்சி வேலுச்சாமி, சசிகலாவின் கணவர் நடராஜனின் நெருங்கிய நண்பர். இருவருமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

திருச்சி வேலுச்சாமி மூலமாக காங்கிரஸை உடைத்து திண்டிவனத்தை வெளியில் கொண்டு வந்ததே நடராஜன் என்ற பேச்சும் நிலவுகிறது)

இதுதவிர காஞ்சிபுரம், தஞ்சை, கடலூர், பெரம்பலூர், தேனி,வேலூர், சேலம் மாநகரம், சேலம் புறநகர், ஈரோடு, நீலகிரி மாவட்ட தலைவர்களையும் திண்டிவனம் ராமமூர்த்தி அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் நிலை குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளோம்.

அதிமுகவுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைப்போம். வேறு யாருடனும் கூட்டணி கிடையாது. தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு, மதவாத உணர்வுகளை பாஜக கைவிட்டால் அதனுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இன்னும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் தொடங்கவில்லை. அதேபோல புதுவையிலும் அதிமுகவுடன்தான் கூட்டணி. அங்கு புதுவை கண்ணனின் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

அக்கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைப்பாம்.

60 தொகுதிகளை திமுகவிடம் கேளுங்கள் என்று நான் கூறினேன். அதை சிலர் திரித்துக் கூறி மேலிடத்தில் என்னைப் பற்றி வத்தி வைத்தனர்.

இப்போது அதே 60 தொகுதிகளைத்தான் வீரப்ப மொய்லி கருணாநிதியிடம் கேட்டுள்ளார்.

திமுகவுக்கு உண்மையான காங்கிரஸ்காரன் யாரும் ஓட்டுப் போட மாட்டான். அது ஒரு சந்தர்ப்பவாத கட்சி. ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய உதவியாக இருந்த திமுகவை, காங்கிரஸ் மறந்திருக்கலாம்.ஆனால் கட்சித் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள் என்றார் ராமமூர்த்தி.

அதிமுகவிடமும் 60 சீட் கேட்டு, திமுகவிடம் கேட்டது மாதிரி ஆட்சியிலும் பங்கு கேட்டால் திணடிவனத்தைபாராட்டலாம். அந்த தைரியம் திண்டிவனத்துக்கு உண்டா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X