நுழைவுத் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் அப்பீல்-ஜெ
சென்னை:
தொழில்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை செல்லாது என்று அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உயர் கல்விப் படிப்புகளில் சேர்ந்து படிக்க போதிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டோருக்கும், அது கிடைக்கச் செய்யும் வகையில், 2005-06ம் ஆண்டு புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.ஆனால் அந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 2006ம் ஆண்டுதொழில்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கயைை றைப்படுத்த கடந்த பிப்ரவரி 18ம் தேதி நுழைவுத் தேர்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இதன் மூலம், தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்டூ பயின்று, பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையானது என்ற நிலை உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயின்றோர் மேலும் ஒரு நுழைவுத் தேர்வை எழுத வேண்டியதில்லை.
அதேசமயம், இதர பாடத்திட்டங்களின் மூலம் பயின்ற மாணவர்களும் போட்டியில் கலந்து கொள்ள வசதியாக, தனியாக ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்த வழி வகை செய்யப்பட்டது.
பிப்ரவரி 18ம் தேதி இந்த அரசாணை அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இருப்பினும், இந்த சட்டம் நிலை நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், இந்தப் பிரச்சினையை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்படும். இதில் விரைந்த முடிவைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உச்சநீதிமன்ற முடிவின் அடிப்படையில், 2006-07ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகுறித்த கொள்கை முடிவை அரசு அறிவிக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.