சிங்கப்பூர் நிறுவனத்துக்கு நிலம்: அரசு திடீர் பல்டி
சென்னை:
ஜெயலலிதாவின் ஊழல்கள் வரிசை, வரிசையாக அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள நிலத்தை, சிங்கப்பூரைச் சேர்ந்த தனியாருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றதற்காக பெருமளவு பணம் கைமாறிய தகவல் வெளியானதால், இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது என்று தெரிந்து விட்டதால் சுதாரித்துக் கொண்டார் ஜெயலலிதா.
சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிப்காட் நிலத்தை சிங்கப்பூருக்கு விற்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.
மேலும், குறைந்த விலைக்கு விற்பதற்காக வாங்கிய ரூ. 125 கோடி பணத்தையும் திருப்பிக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
இதேபோல, சோழிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பு நிலத்தை மிக மிகக் குறைந்த விலைக்கு அஸெண்டாஸ் உள்ளிட்ட இரு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர்.
ஆனால் இந்த நில பேரத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரி மறுத்து விட்டு நீண்ட விடுப்பில் போய் விட்டார்.
இதேபோல விப்ரோ உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரசு நிலங்களை முறைகேடாக விற்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஜெயலலிதா ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் தற்போது வரிசை வரிசையாக அணிவகுத்து வருகின்றன. இன்னும் எத்தனை ஊழல்கள் வரப் போகிறதோ என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications