தேர்தல் மை: இனி புள்ளிக்குப் பதில் நாமம்!
சென்னை:
இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, கை விரலில் புள்ளியாக மை வைப்பதற்குப் பதில், நீண்ட கோடு போடப்படவுள்ளது.
தேர்தல் திருவிழாவுக்கு கொடி ஏற்றி விட்டார்கள். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனி கட்சிகளின் ஆரவாரம் தூள் பறக்கும்.தேர்தல் தேதியை டெல்லியில் அறிவித்த தேர்தல் ஆணையர்கள், கை விரலில் மை வைக்கப்படுவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டார்கள். வழக்கமாக வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலின் நகத்தில் அழிக்க முடியாத கருப்பு மை புள்ளியாக வைக்கப்படும்.
ஆனால், கரை வேட்டி சயின்டிஸ்டுகள் அதை அழிக்க புதுப் புது மருந்துகளை கண்டுபிடித்துவிடுவது வழக்கம்.
சுண்ணாம்பில் ஆரம்பித்து டாய்லெட் கழுவும் ஆசிட்டை டைலூட் செய்து பயன்படுத்துவது வரை பல வகையான வேதிப் பொருட்களைப் போட்டு மையை அழித்துவிட்டு மீண்டும் வரிசையில் வந்து நின்று காசு கொடுத்த கட்சிக்கு நியாயமாக குத்து போட்டுவிட்டுப் போவது வழக்கம்.
இந்த கள்ள ஓட்டுக் கில்லாடிகளை அடக்க, மை இடும் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது தேர்தல் ஆணையம்.
வரும் சட்டசபைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அதை நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்படி, இடது கை ஆள்காட்டி விரலின் நக நுனியிலிருந்து தசைப் பகுதி வரை நீளமாக ஒரு கோடு (நாமம் போல) போடப்படும். இதன் மூலம் கள்ள ஓட்டு போடுவதை வெகுவாக தடுக்க முடியும் என ஆணையர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாமம் போடத் தயாராகி வருகிறார்கள்.
அதை நினைவூட்டும் வகையில் தான் விரலில் நாமம் போடுகிறதோ தேர்தல் ஆணையம்!
264 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்:
இந் நிலையில் தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இன்று மட்டும் சென்னையில் 14 உதவி கமிஷ்னர்கள், 170 இன்ஸ்பெக்டர்கள், 80 சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு அருகில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நடத்தை விதிகள்: குப்தா எச்சரிக்கை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்க வந்துள்ளன. அவற்றை யாரும் மீறக் கூடாது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
அதனால் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் இவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
- அரசு மானியங்கள், நிதியுதவிகள் குறித்த அறிவிப்புகளை, வாக்குறுதிகளை அரசு அளிக்கக் கூடாது.
- எந்தத் திட்டங்களுக்கும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டக் கூடாது. ஆனால் அதிகாரிகள் இதை மேற்கொள்ளலாம்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிகமாக கூட புதியவர்களை வேலைக்கு நியமிக்கக் கூடாது.
- சாலை அமைப்பது, குடிநீர் வசதி போன்றவை செய்து தருவதாக வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது.
- அமைச்சர்கள் தங்களது துணைப் பணியோடு, தேர்தல் பிரசாரத்தை சேர்த்து செய்யக் கூடாது.
- ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறலாம். ஆனால், பணி உத்தரவு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளவோ, புதிய திட்டங்களை தொடங்கவோ கூடாது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசு மட்டுமல்லாது, அரசியல் கட்சிகளும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் நரேஷ்குப்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications