தமிழகத்தில் திடீரென ஜில் மழை
சென்னை:
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவும் இன்றும் கன மழைபெய்தது. இதனால்வெம்மை குறைந்து குளுமை நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் அடித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்துவதைப் போலவே, தற்போது வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும், இரவில் வெப்பம் குறைந்து பனி கொட்டுகிறது. அதிகாலையில் மூடுபனி நிலவுகிறது.இப்படி தாறுமாறான தட்ப வெப்பத்தில் தமிழகம் குழம்பியிருக்கும் நிலையில், நேற்று இரவு திடீரென சென்னை நகர் மற்றும் புறநகரின் பல பகுதிகளில் லேசான மழை பெய்து மக்களை குஷிப்படுத்தியது. சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையால், வெப்பம் குறைந்தது. இருப்பினும் மழை சரியாகப் பெய்யாத காரணத்தால் புழுக்கம் நிலவியது.
இந் நிலையில் இன்று காலையில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும்புதுவையில் கன மழை பெய்தது. திண்டிவனம், நாகப்பட்டனம், சுங்குவார்சத்திரம்,சிதம்பரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. பலத்தகாற்றுடன் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் இன்று லேசான மழை பெய்தது. சென்னையில் காலையிலிருந்துநல்ல வெயில் அடித்து வந்தது. பிற்பகலுக்கு மேல் வானம் இருண்டு, பலத்த காற்றுவீசியது, லேசான தூறல் அடித்தது.
நேற்றிரவு சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், சேலையூர், கிண்டி, ஆதம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், மேடவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம் என பல பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக கடும் புழுக்கத்தில் இருந்த சென்னை மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. இதேபோல நகரின் உட் பகுதிகளான நுங்கம்பாக்கம், எழும்பூர், அயனாவரம், அண்ணா சாலை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால்தான் இந்த மழை உண்டாகியிருப்பதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடல் காற்று தரைப் பகுதிக்குவருவதாலும் இந்த மழை ஏற்பட்டிருக்கலாம் என அது தெரிவித்துள்ளது.
இன்னும் 24 மணி நேரத்திற்கு லேசான மழை தொடரும் எனவும் வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.