கண்காணிக்கும் கருணாநிதி: கடுப்பில் நடராஜன்!
அருப்புக்கோட்டை:
நான், வைகோ, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் ஆகியோர் என்ன செய்கிறோம் என்பதை திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு ரூபங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
திமுக முகாமில் உள்ள சில கட்சிகளையும், சிதறிக் கிடக்கும் பல்வேறு சக்திகளையும் ஒன்று திரட்டி அதிமுக பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் இமாலய வேலையில் நடராஜன் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.எனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே இல்லை, போயஸ் கார்டன் என்னை ஒதுக்கி வைத்துள்ளது என்று இமேஜை உருவாக்கி வைத்திருப்பவர் நடராஜன்.
ஆனால், கட்சிக்கு ஆள் பிடிப்பது, கூட்டணிக்கு கட்சி பிடிப்பது போன்ற வேலைகளில் உளவுத்துறைக்கு இணையாக படுவேகம் காட்டி வருகிறார்.
வழக்கமாகவே நடராஜன் விஷயத்தில் எப்போதுமே திரைமறைவு சமாச்சாரங்கள் தான். இந்தமுறை அதிமுகவுக்கு கட்சிகளை நடிகர்களை கொண்டு வரும் வேலையிலும் தனது அதே பிகைண்ட் த ஸ்கிரீன் வேலையில் தீவிரமாக உள்ளார்.
காமெடியன் செந்திலை அவர்தான் அதிமுகவுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார். இப்போது கார்த்திக்கையும் கொண்டு போவதற்கான பாதையைப் போட்டு விட்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான, ஓரிரு முக்குலத்தோர் பிரமுகர்களையும் சமாதானப்படுத்தி, சாம, தான முறையில் அணுகி அவர்களை அதிமுகவுக்கு ஆதரவாக மாற்றி வருகிறார்.
அதேபோல வைகோவையும் அதிமுக கூட்டணிக்குள் இழுக்க பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார். இந் நிலையில் விருதுநிகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் இப்போது நலமாக, வளமாக, அமைதியாக உள்ளது. ஒரு பெண்ணின் ஆட்சி இங்கு நடப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஜாதி மோதல்களால் ரத்தக் களறி ஆனது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது மாறியது.
இப்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.
அதிமுகவில் பல நடிகர்கள் சேருவதற்கு நான்தான் முக்கியக் காரணம். இப்போது தென் மாவட்டங்களில் நான் அதிகம் சுற்றுப்பயணம் செய்வதால் நடிகர்கள் சேருவது குறைந்து விட்டது.
நண்பர்கள் விரும்பினால், ஆதரவு தெரிவித்தால் அருப்புக்கோட்டையில் போட்டியிட தயாராக உள்ளேன். விரைவில் நல்ல செய்தியைத் தருகிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி சிலருடைய பெயர்களை ஹிட் லிஸ்ட்டில் வைத்துள்ளார். அதாவது நான், வைகோ, எல்.கணேசன் ஆகியோர் என்ன செய்கிறோம் என்பதைக் கண்காணிக்க தனிப்படையை அமைத்துள்ளார் கருணாநிதி.
நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை கண்காணிப்பதே அவரது முக்கிய வேலையாகி விட்டது என்றார் நடராஜன். அவரது பேட்டியின்போது மதுரை ஆதீனமும் உடனிருந்தார்.