பெட்ரோல் குண்டுகளுடன் சுற்றிய கும்பல் கைது
சென்னை:
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் கிராமங்களில் விமானப்படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.
2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னைப் புறநகர் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கிண்டி கத்திப்பாரா பகுதியில், போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு வேனை நிறுத்தி அவர்கள் சோதனை போட்டபோது, அதில் பெட்ரோல் குண்டுகள், அரிவாள், கத்திகள் ஆகியவை இருந்தன.இதையடுத்து அந்த குண்டர்களை போலீஸார் கைது செய்தனர். குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்தவர்கள். பழவந்தாங்கல் நகராட்சி தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்த தாஙக்ள் செல்வதாகவும் கூறினர். அதிமுக பிரமுகர் ஒருவர்தான் தங்களை அனுப்பியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து வேனில் இருந்த 16 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
தேமுதிக புறக்கணிப்பு:
சென்னை மாநகராட்சியில் இன்று 17 வாக்குச் சாவடிகளில் நடந்த மறு வாக்குப் பதிவை விஜயகாந்த்தின் தேமுதிகவும் புறக்கணித்தது. ஏற்கனவே அதிமுக, மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்த மறு வாக்குப் பதிவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன.
அதிமுகவினருக்கு அரிவாள் வெட்டு:
கந்தன்சாவடி திருமலை நகர், மனோன்மணி பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்தது.
அவர்கள் கள்ள ஓட்டுப் போட முயன்றபோது அவர்களை அதிமுகவைச் சேர்ந்த சீனிவாசன், வெல்டிங் சேகர், தெய்வசிகாமணி ஆகியோர் தடுக்க முயன்றனர். அப்போது அந்தக் கும்பல் அதிமுகவினர் 3 பேரையும் அரிவாளால் வெட்டியது. இதில் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து வெளியேறிய அக்கும்பல் ஒரு டாடா சுமோ காரை அடித்து நொறுக்கி விட்டு சென்றனர்.
மதிமுக வேட்பாளரின் கணவர் கோபம்:
திருவொற்றியூர் நகராட்சியில் 16வது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞான சவுந்தரியின் கணவர் அன்பழகன் வாக்குச் சாவடிக்கு வந்தார்.
திமுகவினர் கள்ள ஓட்டக்களைப் போடுவதாக கூறி கோபமாக சப்தம் போட்ட அவர் வாக்குப் பெட்டியை தூக்கி சாலையில் வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போலீஸார் விரைந்து வந்து வாக்குப் பெட்டியை திரும்பவும் உள்ளே கொண்டு வந்து வைத்தனர். பின்னர் இந்த வாக்கு சாவடிக்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
பெண் பெயரில் ஓட்டுப் போட வந்த வாலிபர்:
வளசரவாக்கம் பிரகாசம் காலனியில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் கொடுத்த பூத் ஸ்லிப்பை அங்கிருந்த தேர்தல் அலுவலரிடம் கொடுத்தார்.
அதில் கல்யாணி என்ற பெயர் இருந்தது. இதைப் பார்த்த அந்த அலுவலர் இதில் பெண்ணின் பெயர் உள்ளது. ஏற்க முடியாது என்றார். ஆனால் அதை கேட்க மறுத்த அந்த நபர், எனக்கு நிறைய வேலை உள்ளது. ஓட்டுப் போட விடுங்கள் என்று கூறினார்.
யாரோ ஒரு பெண் பெயரில் உள்ள ஓட்டை, கள்ள ஓட்டுப் போட வந்து விட்டு, அதையும் எகத்தாளமாக கூறிய அந்த வாலிபரை பூத் ஏஜென்டுகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications