ஈழத் தமிழர்களுக்காக பந்த்: ராமதாஸ் கோரிக்கை
சென்னை:இலங்கை இனவெறி அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பந்த்நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் அதிகரித்து வரும் ஈழத் தமிழர்கள் படுகொலைச்சம்பவம் நம்மை பெரும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு எங்களுடையஉணர்வுகளை எடுத்துரைப்போம் என பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமரின் கரிசனம் நமக்கு ஆறுதலை அளிக்கிறது. அதே சமயம், இலங்கைத் தமிழர்களின் சொல்லொணாத்துயரத்திற்கு அது மருந்தாக அமையாது. அங்கு தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். யாழ் மக்களுக்குஉணவும், மருந்துகளும் தாராளமாக கிடைக்கச் செய்ய வேண்டும். ஏ 9 சாலை திறக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள இந்தியா தீவிரமாக முயற்சிக்க வேண்டும். இந்தியாவுக்குவருவதற்கு முன்பு நெடுஞ்சாலையைத் திறக்க வேண்டும் என ராஜபக்ஷேவுக்கு இந்தியா உத்தரவிட வேண்டும்.
இலங்கை விமானப் படையினருக்கு பஞ்சாபிலும், கோவையிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகசொல்லப்படுகிறது. அதை உடனடியாக நிறுத்தி இலங்கை வீரர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
இந்தியாவில் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடும் பாகிஸ்தானுடனும், அருணாச்சல் பிரதேசத்தை அபகரிக்கப்பார்க்கும் சீனாவுடனும் இலங்கை அரசு நட்பாக இருந்து ஆயுதங்களைப் பெற்று தமிழர்களைக் கொன்றுகுவிக்கிறது.
இப்படி ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் இந்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும். அதை மத்திய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தக் கூடிய பொறுப்பு தமிழக முதல்வர்கருணாநிதியிடம் உள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை ராஜபக்ஷேவுக்குவெளிப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தமிழகமும், ஈழத் தமிழர்கள் மீது உறுதியான அன்பும், ஆதரவும்கொண்டுள்ளது என்பதை நிரூபிக்க, தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், முழுஅடைப்புப் போராட்டம் நடத்தினாலும் தவறில்லை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.